Friday, August 6, 2021

சிரிப்பு வருது.. சிரிப்பு வருது...



இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!
ஆக. 5. பிறந்த நாள்.
ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?
“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.
பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்! “காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.
ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது. பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.
அந்தப்படம் மட்டும் ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராக ஜொலித்திருப்பார். ஆம், அவரது மாஸ்டர்பீஸ்: ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு இன்னொவேடிவாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, நிமிர்ந்து ரசிப்போம் என்றால் மனோகரின் உடலை நம் முன்னால் எடுத்துக் கொண்டு வரும் ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலோடு படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா பி.எஸ்.லோகநாதன்.) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)
ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."
ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!
சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')
நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.
“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் "புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் ஒருவரே yodelling இல்.
இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.
‘சபாஷ் மீனா’வில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)
சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும், பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..
டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.
கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?
‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார்.
அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’
இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

பெண் வேடத்தில் வந்து கலாய்த்த ஒரு படம் ‘புதையல்' “ஹலோ மை டியர் ராணி.. எங்கம்மா உனக்கு மாமி..” (“யுவர் கண்ணு ஸ்வீட் பன்னு.. யுவர் காது கேக் காது..”) மற்றொன்று, ‘வாலிப விருந்து’ (“டோரியா.. சென்னப்பட்டினம் போறியா.. கப்பலா, காரிலா, ஓசி ரயிலா..?”) கிணற்றுச் சுவரில் பாடியபடி நடனமாட பாபுவின் கால்களால்தாம் முடியும் போல. (“ஓஹோ மேரி பியாரி புல் புல்…”)

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்!
பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் பாடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”

><><

1 comment:

வெங்கட் நாகராஜ் said...

மறக்க முடியாத நடிகர். அவரது பல பாடல்களை மீண்டும் மீண்டும் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறேன். இப்போதும் கேட்பதுண்டு.

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!