Sunday, January 31, 2010

கண்டதே காட்சி!




சந்தித்த இடங்களிலெல்லாம்
சம்பாஷித்து மகிழ்ந்தார்கள் மனிதர்கள்.
சந்திப்பதற்கென்றே
சந்தர்ப்பங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்.
அது ஒரு காலம்...
இப்போது
எல்லாமே காட்சியாக விரியவேண்டும் அவர்களுக்கு.
சில சமயம் மெகா சீரியல் காட்சியாக.
எனவே இப்போதெல்லாம்
கவிதைகளில் மட்டுமே
பேசிக் கொள்ளுகிறார்கள் மனிதர்கள்.


ஒரு நிமிடம்...

முகம் கண்டே ஒதுங்கி விடுகிறார்கள்.
நிலை அறிந்தால் நெருங்கத் தயங்குகிறார்கள்.
அப்படி உன்னிடம் நான்
என்ன யாசித்துவிடப் போகிறேன்?
அப்படி எனக்குத் தந்துவிடத்தான்
உன்னிடம் என்ன உளது
வெறும் பணத்தைத் தவிர?
உன்னிடமிருந்து பெறும் எதுவுமே என்
சோகத்தைத் துடைத்து விடப் போவதில்லை
உன்னுடன் பகிர்தலைத் தவிர!

Wednesday, January 27, 2010

அந்த ரகசியம்...

திகாலை ஐந்து மணி. வாகீஸ்வரன் எழுந்து கொண்டார். மேஜையடியில் அமர்ந்தார். நேற்று விட்ட இடத்திலிருந்து கதையை எழுத ஆரம்பித்தார்.

வாசலில் கோலமிட்டு வந்தாள் மனைவி. ''மளிகை சாமான் தீரப்போகுது. இந்த வாரம் வாங்கணும். பாக்கி முன்னூறு ரூபாய் தரணும்.''

திக்கென்றது. ''ம், சரி...'' தொடர்ந்து எழுதலானார்.

பத்து மணி. போஸ்ட்மேன் வீசிய கடிதத்தைப் படித்தாள் மனைவி.

''யாரு?''

''உங்க ஒன்றுவிட்ட ஒண்ணுவிட்ட தங்கச்சி மகன் ரகு பத்தித்தான். வேலை கிடைக்கலே, சீட்டு நடத்திப் பிழைக்கிறேன்னு உதவச் சொன்னவனை நம்பி கஷ்டப்பட்டு பணம் கட்டினீங்களே, அவன்தான்.. ஊரைவிட்டு ஓடிட்டானாம்...''

ரெண்டாயிரம் ரூபாய்! தலை சுற்றியது.

கதை தொடர்ந்தது.

பன்னிரண்டு மணி. தரகர் கந்தப்பன் எட்டிப் பார்த்தார்.

''மதுரைப் பக்கம் ஒரு வரன் வந்ததே உங்க பொண்ணுக்கு? அவங்களை நேத்து சித்திரைத் திருவிழாவில சந்திச்சு பேசினேன். வேறே தகைஞ்சுட்டதாம்.''

''அப்படியா? ம்,சரி...'' எழுத்து தொடர்ந்தது.

பிற்பகல் மணி மூன்று. நண்பர் மாதவன்.

''...அந்தப் பையன் சிவா ரொம்ப ஏழைன்னு வேலை வாங்கிக் கொடுத்தீங்களே. அவன் எல்லார்கிட்டேயும் உம்மைப் பத்தி இல்லாததும் பொல்லாததும் சொல்லிட்டிருக்கான்...''

அவனா? மனசு வலித்தது. தொடர்ந்து எழுதி முடித்தார் கதையை.

ந்தக் கதை வெளியான மறு நாள்...பரபரப்பாக அவர் வீட்டில் நுழைந்த வாசகர் அன்புராஜ் அவர் கையைப் பிடித்துக் குலுக்கித் தன் பாராட்டைத் தெரிவித்தார்.

''ரொம்பப் பிரமாதமாக இருந்திச்சு சார் கதை! காரக்டர்ஸ் மனசில எழும் வேதனைகளை, வலிகளை எப்படி சார் உங்களால இப்படி நுணுக்கமா தத்ரூபமா எழுத முடியுது?''

எப்படி என்பதை அவர் சொல்லவில்லை. ''ஏதோ வருது.''

Friday, January 22, 2010

கொடி அசைந்ததும்...



'கொடி அசைந்ததும்காற்று வந்ததா? காற்று வந்ததும் கொடி அசைந்ததா?' பாட்டைக் கேட்கும் போது அதே போல் சில கேள்விகள் மனதில் எழாமலில்லை. சிலவற்றையாவது இதில் இட்டு பதில் தேட முயல்கிறேன்.


1. ஆடை குறைந்ததும் ஃபாஷன் வந்ததா, ஃபாஷன் வந்ததும் ஆடை குறைந்ததா?


2. பி.பி. வந்ததால் கோபம் வருகிறதா, கோபம் வருவதால் பி.பி. வந்ததா?


3.பத்திரிகை போரடித்ததால் டி.விக்கு மாறினார்களா, டி.வி.க்கு மாறியதால் பத்திரிகை போரடித்ததா?


4.எல்லாருமே கவிதை எழுதுவதால் கவிதை பாப்புலர் ஆனதா, கவிதை பாப்புலர் ஆனதால் எல்லாருமே கவிதை எழுதுகிறார்களா?


5. போர் அடிப்பதால் வேலைகளைத் தவிர்க்கிறோமா வேலைகளைத் தவிர்ப்பதால் போர் அடிக்கிறதா?


6.கதாநாயகன் பண்ணுகிற அசட்டுக் காரியங்களை சகிக்க முடியாததால் காமெடியனை அவர் என்ன செய்தாலும் ரசிக்கிறோமா காமெடியன் என்ன செய்தாலும் ரசிக்கும்படி இருப்பதால் க. நாயகன் பண்ணுகிற காரியங்களை சகிக்க முடியவில்லையா?


7. கிளையன்ட் ஏமாளியா இருக்கிறதால நாம புத்திசாலியாகிறோமா நாம புத்திசாலியா இருக்கிறதால கிளையன்ட் ஏமாளியாகிறாரா?


தெரிந்தால் சொல்லுங்களேன்...