Sunday, June 29, 2025

நாவல் அறிமுகம்...


‘வைரமாலை.’ 1954-இல் வெளியான படம்.
“கூவாமல் கூவும் கோகிலம் .. “ என்று பத்மினியுடன் விஸ்வநாதன் ராமமூர்த்தி இசையமைத்த கண்ணதாசன் பாடலை பாடியபடியே வந்த அந்த நாயகர் பின்னாட்களில் பிரபல வில்லனாக வருவார் என்று எதிர்பார்த்திருப்பார்களா? ஆர்ப்பாட்டம் இல்லாமல் அலட்டிக்கொள்ளாமல் வரும் பாலிஷ் வில்லன்...
ஆர். எஸ் மனோகர். இன்று பிறந்த நாள்!
அறிமுகமான படம் ‘ராஜாம்பாள்’. ஜே. ஆர். ரங்கராஜுவின் அந்தப் பிரபல நாவல்தான் கதை. கல்கியின் ‘பொய்மான் கரடு’ படமானபோது பதில் அதிலும் நாயகன்.
நல்லவனாக சில படங்களில் நடித்து முடித்துவிட்டு வில்லன் வேடத்திற்கு நகர்ந்தார் மாடர்ன் தியேட்டர்ஸின் அபிமான நடிகர். அவர்களின் ‘வண்ணக் கிளி'யில்தான் வில்லனாக மாறினார்.
மரப்படிகளில் இறங்கி நின்று புறங்கையில் மது பாட்டிலைத் தட்டி உடைத்தபடி என்ட்ரி தருவாரே பிச்சுவாப் பக்கிரியாக ‘வல்லவனுக்கு வல்லவன்’ படத்தில்.... அந்த நல்லவனுக்கு நல்லவன் ரோலில் அசத்தியது அடுத்த திருப்பு முனை. அந்தப் பாடல்! 'பாரடி கண்ணே கொஞ்சம்... பைத்தியமானது நெஞ்சம்...'
திரை அவருக்கு இரண்டாவதுதான். முதலிடம் மேடை. மேடையில் பிரம்மாண்டம் என்றால் அது மனோகர்தான்! ‘நாடகக் காவலர்' மனோகரால் நன்கு அறியப்பட்ட புராண சரித்திர புருஷர்கள் நிறைய. 1800 தடவைக்கு மேல் நடிக்கப்பட்ட ‘இலங்கேஸ்வரன்’ அதில் மிகப் பிரபலம். தவிர ‘துரோணர்', ‘துரியோதனன்', 'சூரபத்மன்', 'சாணக்கிய சபதம்', 'இந்திரஜித்'...
கண் மூடித் திறப்பதற்குள் நாடகக் காட்சி மாறுவது ஸ்பெஷாலிட்டி என்றால் நாடகத்தில் சினிமாஸ்கோப் இவருடைய அறிமுகம். திரையிலும் சரி மேடையிலும் சரி அந்தக் கணீர்க் குரலும் பளிங்குத் தெளிவு உச்சரிப்பும் அவருக்கு ஒரு தனி இடத்தை கொடுக்கத் தவறவில்லை.
‘நான்’, ‘சொர்க்கம்’ (இரட்டை வேடத்தில் ), ‘குழந்தைக்காக’, ‘அடிமைப்பெண்' ‘நான்கு கில்லாடிகள்' சந்திரபாபுவின் ‘தட்டுங்கள் திறக்கப்படும்'.... பர்ஃபெக்ட் பர்ஃபாமன்ஸ் தந்த படங்கள் நிறைய. இந்தி ராஜ் குமார் போல இவர் நடை ஒரு தனி ஸ்டைல்.
குறிப்பாக சொல்லணும்னா உடனே தோன்றுவது ‘ராஜா’ தான். சிவாஜி உண்மையில் ஒரு போலீஸ் இன்ஸ்பெக்டர் என்று பாஸ் ரெங்க ராவிடம் நிரூபிக்க மனோகர் படும் பாடு! ‘ஒண்ணு மட்டும் ஞாபகத்தில் வெச்சுக்குங்க. அந்தத் தாயை நான் கடத்தி வெச்சிருக்கிறதாலதான் நான், நீங்க, எல்லாரும் இப்போ உயிரோட இருக்கோம்!’ என்று அழுத்தமாக சொல்வதும்… ‘ஒரே ஒரு சந்தர்ப்பம் கொடுங்க பாஸ்’னு கேட்டு ரங்கராவ், ‘சரி விடுங்கடா அவனை’ன்னதும் பிடித்திருந்த அடியாட்களிடமிருந்து விடுவித்த கைகளை உதறிக் கொண்டு, தளர்ந்திருந்த டையை முறுக்கிக் கொண்டு, கோட்டை சரி செய்தபடியே நடந்து சிவாஜியிடம் பேசியபடியே பண்டரி பாயை அடிக்க ஆரம்பிப்பதும், அந்த முயற்சியிலும் தோற்றுவிட... அந்த நெடு நீளக் காட்சி நெடுக தான் சொல்வதை நிஜமாக்க அவர் துடிக்கிற நடிப்பு க்ளாஸ் ரகம்.

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!