Sunday, July 13, 2025

அவன் விருப்பம்…


அவன் விருப்பம்… (ஒரு குட்டிக் காமெடி)

கே.பி.ஜனார்த்தனன்

“உட்கார், விஜி. கொஞ்சம் பேசணும்.”
“ஐய, இப்ப டைம் இல்ல, மெஷின்லேருந்து துணி எடுத்துக் காயப் போடணும், மழை வரதுக்குள்ள.”
“பரவாயில்லை, உட்காரு பத்து நிமிஷம் தான்!”
“சரி என்ன விஷயம்?”
“இல்ல, நீ உன் மனசுல என்ன நினைச்சுட்டு இருக்கே? ரெண்டு பேரும்தான் ஆபீஸ் போறோம். ரெண்டு பேருக்கும் ஒரே டைம் தான் மீதி இருக்கு. இப்படி வீட்ல இருக்கிற எல்லா வேலையையும் இழுத்துப்போட்டு நீயே செய்துட்டிருந்தா நான் ஒரு ஆளு சும்மா உட்கார்ந்து வேடிக்கை பார்த்துட்டு இருக்கிறது எனக்குக் கஷ்டமா இருக்காதா?”
“அப்படி நான் என்ன பெரிய வேலை பார்த்துட்டு?”
“பின்ன? முழு சமையலையும் நீதான் பார்த்துக்கிறே. நான் வாக் போகும்போது வழியில காய் வாங்கிட்டு வருவதோடு சரி.”
“இப்ப என்ன சொல்ல வர்றே? என் சமையல் நல்லா இல்லையா?”
“ஏ ஒன்னா இருக்கு. அதுக்கே உனக்கு நேரம் பத்தாது. ஆனா பாத்திரத்தைக் கழுவறது? அதையும் நீ தான் பண்றே!”
“லேசா அலசி டிஷ் வாஷர்லதானே போடறேன்?”
“சரி, துணியெல்லாம் அயன் பண்றதும் நீதான்!”
“நல்லாயிருக்கே கதை… நீ அயன் பண்ணினா பளிச்சுன்னு இருக்குன்னு சொன்னது யாரு?”
“நான் தான்! நான் தான் சொன்னேன். சரி தோட்டத்துல தண்ணி ஊத்த சொல்லலியே? எல்லா செடிக்கும் தண்ணி ஊத்தறதும் நீதானே?”
“அதை ஒண்ணும் சொல்லாதே! அது எனக்கு பிடிச்ச வேலை. இந்த பூக்களை எல்லாம் நான் எப்படி ரசிக்கிறேன் தெரியுமா?”
“சரி, நீயாக ஒத்துக்க மாட்டே! அன்னைக்கு பெங்களூரிலேருந்து என் ஃப்ரெண்டு சந்தோஷ் வந்திருந்தான் இல்லை வீட்டுக்கு? ரெண்டு நாள் தங்கி இருந்தான்ல? ஊருக்கு போனவன் ஃபோன்ல என்னை வறுத்து எடுத்துட்டான். என்னதான் ஆதர்ச தம்பதின்னாலும் இப்படியா? உன்னை மாதிரி தானும் ஒரு வேலைக்குப் போகும் ஜீவன் இல்லையா? ஒரு லிமிட் இல்லையா? எங்க வீட்டிலேயும் நடக்கறதுதான், ஆனா இது டூ மச்! வருஷம் இது 2021. எங்களுக்கு உரிமை வேணும்னு அவங்க சங்கம் வெச்சு பேச ஆரம்பிச்சு எத்தனை வருஷம் ஆச்சு? நீ என்னன்னா.. வக்கீல் நோட்டீஸ்ல போய்த்தான் முடியப் போகுது பாரு! அப்படி இப்படின்னு விளாசிட்டான்.”
“இத பாரு, வெளியில உள்ளவங்க என்ன சொல்றாங்கன்னு பார்க்கிற மாதிரியா நாம இருக்கோம்?”
“அப்ப அதை விடு. ஊரிலேருந்து உங்கம்மா வந்திருந்தாங்களே நாலு நாளைக்கு? அவங்க என்ன சொன்னாங்க தெரியுமா? வீட்டில ஒரு தட்டு கழுவினதில்லேயே விஜி? இங்கே என்னடான்னா வண்டி வண்டியா எம்மாம் வேலை? பார்த்திட்டு என்னால சும்மா இருக்க முடியலைன்னு அந்த நாலு நாள் தானும் டிஷ் வாஷ் பண்ணல? அப்போ உனக்கு கொஞ்சம் ரெஸ்ட் கிடைச்சுதா இல்லையா? அது எப்பவும் கிடைக்கணுமா வேண்டாமா?”
“ஐய, அந்த நாலு நாளும் எனக்கு வீட்ல நேரமே போகலே..”
“அதெல்லாம் எனக்கு தெரியாது. முன்களப் பணியை மாதிரி பின் களப் பணியையும் நாம பகிர்ந்துக்க வேண்டாமா? நான்தான் அதைச் செய், இதைச் செய்னு சொன்னேன். ஆனா நானும் ஏதாவது செய்யணும் இல்லையா?”
“சொல்றதை கேளு, எல்லாம் நான் பாத்துக்குறேன்!”
“அதெல்லாம் முடியாது. நாளைலேருந்து ரோஜாச் செடிக்கு மட்டும் நான் தான் தண்ணீர் ஊத்துவேன். நீ ஒண்ணும் சொல்லப்படாது, ஆமா, சொல்லிட்டேன்!”
“ஓகே, மைதிலி, இஃப் யூ இன்ஸிஸ்ட்!” என்று எழுந்தான் விஜி.
><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!