519
நீ என் முன் அமர்ந்திருக்கிறாய்
இந்தக் கணம் என் முன் விரிகிறது
இரு, இதை நான்
சேமித்து வைக்க வேண்டும்.
520
சொல்லத்தெரியாத வார்த்தைகளுக்குள்
ஒளிந்து கிடக்கிறது
என் காதல்.
521
ஜன்னல் தெரியும் நிலவும்
எதிர்சீட்டில் நீயும்
என்னைக் குழப்புகின்றீர்கள்,
யார் எது என.
522
வெகு காலமாக வசிக்கிறோம் என்
வெளிப்படுத்தத் தெரியாத காதலும் உன்
அடக்கிக் கொள்ள முடியாத அன்பும்
சந்திக்கும் புள்ளியில்.
523
அத்தனை அழகுக்கு
என்னிடம் வார்த்தையில்லை
என்கிறது கவிதை.
(பி.கு.:அழகைக் குறைத்துக் கொள்,
அல்லது கவிதை கேட்காதே.)
524
நினைத்துப் பார்க்கவே முடியவில்லை,
சிறு சிறு ஊடல்களும்
சின்னச் சண்டைகளும்
இல்லாத நம் வாழ்க்கையை!
525
அசையாது நீ
அசைகின்ற என் மனம்
526
என்ன முயன்றும் என்னால் முடியாத,
எண்ண வேகத்துக்கு ஈடு கொடுக்க,
எப்போதும் முடிகிறது உன் அழகால் மட்டும்.
527
கற்பனை நின்றதும்
உன் மீதான
கனவுகள் தொடங்கின..
528
விழியாடும் அழகு.
அழகாடும் விழி.
><><

4 comments:
அருமை
அதானே... சிறு சிறு ஊடல்களும் சின்னச் சண்டைகளும் இருந்தால் தானே...?
1330
எல்லா கவிதைகளும் சிறப்பு. ஜன்னல் வழி நிலவும், அவளும்... மிகவும் ரசித்தேன்.
கரந்தை ஜெயகுமார்; திண்டுக்கல் தனபாலன்; வெங்கட் நாகராஜ்:
நன்றி... மிக்க நன்றி.
Post a Comment