Saturday, April 25, 2026

அன்பின் பெருஞ்சொற்கள்...


அன்பின் பெருஞ்சொற்கள்... (அவர் வரிதான்)
யஷோ வின் ‘வரிகளில் படிந்த நிழல்.’ (கவிதைகள்) படித்தேன்.
ஒரு வருடத்திற்கு ரசித்துக் கேட்கிற கவிதைகளை ஒரே தொகுப்பாகக் கொடுத்துவிட்டார். முதலில் ஏற்படும் ஐயம் இதை விமர்சிக்கும் அளவுக்கு கவிதை ஞானம் எனக்கு இருக்கிறதா என்பது. சரி சிவாஜி நடிப்பை விமரிசனம் மாதிரி இது ஒரு ‘வியப்புசனம்’!
யதார்த்தத்தின் உலகத்திற்கும் பெரும் கனவின் அமானுஷ்ய வெளிகளுக்கும் இடையே அவரது நளினமான தாவல்களின் வேகம் அபாரம்.
தலைப்பு: 'மறுக்கும்.'
சிறகு வற்றி இறகுகள் சிதறிய
நில விள்ளலின் பாரமென கனக்கிறது
நேசத்தின் சொற்தின்ற விழிகள்
இமை திறந்து
பெருவெளிக் கூடடைய எத்தனிக்கையில்
விடியல் மறுக்கும் இரவாகிறாய்.
பிரியம், அன்பு, காதல், லயிப்பு எல்லாவற்றையும் சாதாரண சொற்களாக்கி விடுகின்றன, அவர் கையாண்டிருக்கும் அருஞ்சொற்றொடர்கள். 'எங்கேயும் செல்லாத வானத்’தையும் ‘கனவுகளின் சப்தங்களால் ஆன இரவை’யும் நினைக்கவே புல்லரிக்கிறது. அதற்குள் ‘மணித்துளிகளற்ற கணம்’, ‘இருளை உமிழ்ந்த நெடும் பகல்’, என்று சொல்லிக் கொண்டே போகிறார். ‘யாமத்தின் நீளம் அளக்கும் துயில்…’ என்னவொரு ஒயில் சொற்றொடரில்!
பிடித்து இழுத்து நிறுத்திடும் கவிதைகள்...
தலைப்பு: 'டி என் ஏ.'
போல ஒரு நீ
தேட சில வார்த்தை
அறியாமலிருக்க சிறு தூரம்
தவிக்க அவ்வெழுத்து
கேவ ஒரு கடுஞ்சொல்
அணைக்க உன் கவிதை
அதில் நீ
போல ஒரு நான்.
வானத்திலிருந்து வார்த்தைகளை எடுத்து தன் கானத்தில் கோர்க்கிறார். மிகச் சுருக்கமாகவும் மிக விரிவாகவும் அன்பின் போர்வைகளை ஏங்கும் என்பில் போர்த்துகிறார், தன் 'மீளவியலா' கவிதைகளால்!
இதோ ஒன்று!
தலைப்பு: 'யுகமாதல்'
கழியா நாழிகை நீ
களைத்த நிமிடமாய் நான்
யுகமாவாயா.
மணலாழி மனது.. கவிஞ வெறுமை.. கன்ன வெதுமை.. பிம்பத் திரிவு.. தீ இடை... பிரிச்செடுக்க முடியாத உரிச்சொற்றொடர்கள்! கவிதைகளுக்கு அவை highly complementing!
தரிசித்ததில்லை, ஆனால் தரிசிக்க விரும்புவோம் அவர் காட்டும் திசைகளில் கொட்டக் கொட்ட விழித்தபடி அமர்ந்திருக்கும் அழகுகளை.
‘அந்தகாரத்தின் ஒளிக்கீற்றாய் பயணிக்கும் வேகம் உனதன்பு…’ அன்பின் வீச்சை அட்டகாசமாக அளவிடுகிறார் மற்றொரு கவிதையில்!
தலைப்பு: 'என்னுள்ளே.'
ஒரு குழந்தையின் மொழியறிதலாய்
ஒவ்வொரு சொல்லாய்
உள்ளேகுகிறாய் நீ.
(மனத்தினுள் ஏகுபவனின் ஊடுருவலை குழந்தையின் ஒவ்வொரு சொல்லாய் மொழியறிதலை விட மென்மைப் படுத்த முடியுமா?)
கற்பனையின் எல்லை பிரமிக்க வைக்கிறது. ‘...அணுகி வான் பகிர முயலும் அல்காரிதத்தின் ஒன்றும் பூஜ்யமும் சுட்டிய இடங்களில் அமர மறுத்தால்’... என்ன ஆகும்?
அருவியாய் வந்துவிழும் உவமைகள்... ‘பாதியில் நின்று போன தீசிஸ்’, ‘அறிய முற்பட்ட முரண்’, ‘ஆர்வம் தொலைத்த உரையாடல்கள்’...
இசையை இசைக்கிற இவரின் சொற்கள் இசைக்கு மிக இசைவானவை. ‘மனதின் ஆழத்தில் சப்தித்துக் கொண்டே இருக்கும் எழுத்துக்கள் மறைத்த பேரிசை..’
வார்த்தைகள் ரத்தினங்கள். அறிவார், ஆகவே காதலில் ஆட்படுவதை ரத்தினச் சுருக்கமாக...
தலைப்பு: 'என்னை.'
என்னுள்ளே/ என்ன/ நிகழ்த்திக் கொண்டிருக்கிறாய்/ உன்னை.
அந்த அன்புலகிற்குள் அஸால்டாக அழைத்துப் போகிறார், ‘நம் பிணக்கை உடைக்க/ போதுமானதாயிருக்கிறது/ ஒரு அர்த்தமற்ற மீம்…’ என ஒரு கவிதையைத் தொடங்கும்போது.
ரசித்துப் படிக்க வேண்டிய கவிதைத் தொகுப்பு! அவரே சொல்கிற மாதிரி
‘கவிதைகள் அங்கேதான் இருக்கின்றன
அதற்கானவர்கள் மட்டும்
பயணித்துக் கொண்டே இருக்கிறார்கள்.'
(தலைப்பு: ‘வெவ்வேறாக.')
மிக ரசித்த கவிதை?
தலைப்பு: 'அல்லாது.'
மிஞ்சாப் பேராழி
தீவாரித் தழுவினாற் போலல்லாது
பனியின் துளியொன்றை
அபகரித்தாற்போல
கல.
><><

No comments:

Post a Comment

உங்கள் எண்ணத்தை தெரிவியுங்களேன்!