Sunday, August 17, 2025

அந்த நல்ல சப்தம்...

ஆனிவர்ஸரியும் அதுவுமாக மனைவி கேதிக்கு கிஃப்ட் வாங்க அவன் போனபோது கூடவே உள் நுழைந்த நாய் ஒன்று கண்ணாடியை உடைத்து விட, கையில் இருந்ததை டேமேஜுக்கு அழுதுவிட்டு வெறுங்கையோடு வீடு திரும்புகிறான் டேனி. தொடர்கிறது நாய். வாயில் இவன் பரிசில் செருக எழுதிய சீட்டு. பார்த்துவிட்டு ஆஹா, அழகிய பரிசு! என்று அவள் தழுவிக் கொள்கிறாள் நாயை! பிறகு நாயகனையும்! மாமியார் முன் கேவலப்பட வேண்டாமேன்னு மூடிக் கொள்கிறான் வாயை.
திருப்பம் என்னான்னா... நாயோ ஒரு கடத்தல் கூட்டத்தினுடையது. பண்ட மாற்று செய்ய பயன் படுத்துவது. அதைக் காணாமல் அவங்க தலையைப் பிய்த்துக் கொள்கிறாய்ங்க, அதாவது ஒருத்தர் தலையை அடுத்தவன்! அவர்கள் ஒவ்வொருவராகப் போட்ட, நாய் காணோம் விளம்பரத்தை ஆவலோடு பார்த்து (பின்னே? பெட் ரூமுக்கே வந்துவிட்ட நாயை அவளுக்குத் தெரியாமல் அப்புறப்படுத்த வேறு வழி?) அங்கே போனால் அவன்களுக்குள் வரிசையாய் கொலை விழ, அங்கே போனதால் போலீஸ் இவனைத் தூக்க .. வீட்டில் அமளி.
நாயை வாக் அழைத்துப் போகிறாள் கேதி. வழக்கப்படி வந்த கடத்தல்காரன் ஒருவன் அவள் பையைப் பிடுங்கிவிட்டு பணத்தைக் கொடுத்துவிட்டுப் போகிறான். அவன், பையைப் பிரித்தால் எலும்புத் துண்டுகள். இவள் பையைப் பிரித்து மகிழ்ந்தால், அத்தனையும் கள்ள நோட்டு.
தம்பதி அதை ஸ்டேஷனில் ஒப்படைக்கையில், பெண்டாட்டி முன்னாடி உண்மையை, அவளுக்கு பரிசு வாங்காத உண்மையைச் சொல்லவேண்டி வருகிறது. அடுத்து, வீட்டுக்கே மீதி கோஷ்டி தேடிவர போலீஸ் சுற்றி வளைக்கிறது. அவளுக்கு நாயும், அவனுக்கு அதை பெட் ரூமுக்கு வெளியே தள்ளும் தைரியமும் கிடைத்து விடுகிறது!
1951 -இல் வந்த ‘Behave Yourself’ படத்தில் கேதியாக நடித்தவர் Shelly Winters. இன்று பிறந்த நாள்.
நிறைய பேர் மறைவதாலோ என்னவோ படம் முடியும்போது நடிகர்கள் பேரை in the order of disappearance என்று தமாஷாக போடுவார்கள்.
Shelly Winters... 50 களின் கவர்ச்சிக் கன்னியரில் ஒருவர்.. அழகாய் நடிக்கும் டிப்ஸை மர்லின் மன்றோவுக்கே வழங்கியவர்.
‘A Place in the Sun’ -இல் எலிசபெத் டெய்லருடன் நடித்தபோது அவருக்கல்ல, இவருக்கு ஆஸ்கார் நாமினேஷன் வந்தது. அவார்டை பின்னால் ரெண்டு முறை வாங்கிவிட்டார். (‘The Diary of Anne Frank’, ‘A Patch of Blue.’)
‘எல்லா கல்யாணங்களுமே சந்தோஷ சமாசாரம்தான் ஹாலிவுட்டில். அப்புறம் சேர்ந்து வாழ நினைக்கிறதுதான் எல்லா பிரசினையும் கொண்டுவருது,’ என்பவர் சொன்ன ஒன்று, “ஆஸ்காரை வாங்கிக் கொண்டு நான் வீட்டுக்குள் நுழைந்தபோது என் கணவர் அதைப் பார்த்த ஒரே பார்வையில் எனக்குத் தெரிஞ்சு போச்சு என் மணவாழ்க்கை முடிஞ்சதுன்னு.”
Best Quote? ‘நாடகத்திலதான் அந்த நல்ல சப்தத்தை நீங்க கேட்க முடியும். அதை படத்திலேயோ டி.வி.யிலேயோ கேட்கவே முடியாது. அது ஒரு அற்புதமான நிசப்தம். அர்த்தம் என்னன்னா நீங்க அவங்க இதயத்தில அறைஞ்சிட்டீங்க.’


Wednesday, August 13, 2025

இல்லாமல் முடியாது ..


அது இல்லாமல் முடியாது என்று ஆகிவிட்டது நம்ம வாழ்க்கை. ஆனால் அந்த ‘டி.வி.’யை கண்டு பிடித்தவர், அதன் தந்தை என்று அழைக்கப்படுபவர், முதல் பேசும் சினிமா வெளிவருவதற்கு முந்தைய வருடமே அதைச் செய்து காட்டியவர்...
John Logie Baird. இன்று பிறந்த நாள்! (1888 - 1946)
லண்டன் Royal Institution -இல் 1926 ஜனவரியில் நடந்தது அந்த டெமோ. நகரும் பொருட்களை திரைக்கு நகர்த்தி காட்டினார் ஜான். விநாடிக்கு 5 வேகத்தில் படங்கள் வந்து விழுந்தன திரையில். அப்ப அதற்கு அவர் சொன்ன பெயர் டெலிவைஸர்!
அடுத்த வருடமே லண்டனிலிருந்து கிளாஸ்கோவிற்கு அசைவுகளை ஓசையுடன் டெலிபோன் ஒயர்களின் வழியே டெலிகாஸ்ட் செய்தார். அடுத்த வருடம் லண்டனிலிருந்து நியூயார்க்குக்கு. அதே வருடம் கலர் டெலிவிஷனையும்!
ஒளியை மின்சாரமாக மாற்றும் தன்மை selenium -க்கு உண்டு என்பதைப்பற்றி படித்ததுதான் அந்த ஸ்காட்லாண்ட் இளைஞனை டெலிவிஷனைப் பற்றி சிந்திக்க வைத்தது.
பாவம், ஃபண்ட்ஸ் கிடைக்கவில்லை. பத்திரிகை ஆபீஸில் சென்று தன் ஐடியாவை சொன்னால் பைத்தியம் மாதிரி பார்த்தார்கள். தன் முதல் டி.வி. மாடலை செய்தபோது தையல் ஊசியிலிருந்து சைக்கிள் லைட் வரை கையில் கிடைத்த பொருளை எல்லாம் உபயோகிக்க வேண்டியதாயிற்று.
சுழலும் டிஸ்குகள் அசைவுகளை ஸ்கேன் செய்து மின் சிக்னல்களாக கம்பிகளில் அனுப்ப, வேறோரிடத்தில் அவை திரையில் பதிக்கப்படுகின்றன. முதலில் திரையில் அசைந்த பிம்பம் ஒரு பொம்மையின் தலை. பார்த்ததும் அவர் துள்ளிக் குதித்தார்.
டி.வி.க்கான அந்த ஒரிஜினல் ஐடியா Nipkow உடையது. ஆனால் அதை மேம்படுத்தி தெளிவான பிம்பம் கொண்டுவந்தது இவரது டெலிவைஸர் தான். தெளிவைஸர்!
முதலில் ஐந்து வருடத்திற்கு அவருடைய டெக்னிக்கை உபயோகித்தது BBC. இரண்டு மடங்கு லைன்களுடன் இவருடன் போட்டியிட்டது மார்க்கோனி டிவி. இவருடையது மெக்கானிக்கல் என்றால் அவருடையது எலக்ட்ரானிக்.
டி.வி. உலகத்தின் எந்த சாத்தியதையையும் ஜான் விட்டு வைக்கவில்லை. HD TV, 3D TV.... ஏன், வீடியோவையும் தொட்டார். Phonovision என்று பெயர் வைத்தார்.
டி.வி. வரலாற்றில் இவருடையது மெகா சீரியல்!

Tuesday, August 12, 2025

ஏகத்துக்குச் சிரத்தை...


மறுபடி எடுக்க முடியாத மாபெரும் காட்சி அது. ஆயிரக்கணக்கான துணை நடிகர்களுடன் யுத்தக்காட்சி. ஒரே நேரத்தில் நாலு காமிராவால் படமாக்க ஏற்பாடு செய்திருந்தார் தயாரிப்பாள டைரக்டர்.
'ஆக் ஷன்!' சொன்னதும் படை வீரர்கள் மோதினார்கள். குதிரைகள் பாய்ந்தோடின. பீரங்கிகள் முழங்கின. குண்டுகள் வெடித்தன. மேடைகள் வீரர்களுடன் சரிந்தன. எல்லாம் பிரமாதமாக நடந்து முடிந்ததும் பார்த்தால்... என்ன துரதிருஷ்டம்! முதல் காமிராமேன் ஃபிலிம் அறுந்துவிட்டது என்றார். இரண்டாவதில் லென்சை தூசி அடைத்துவிட்டதாம். மேடை ஒன்று விழுந்து கேமரா முறிந்துவிட்டது என்றார் மூன்றாமவர்.. அப்படியே சோர்வாக உட்கார்ந்துவிட்டார் இவர். தூரத்தில் ஒரு குன்றின் மேல் வைத்திருந்த நாலாவது கேமரா! நினைவுக்கு வர, லாங் ஷாட்டாவது முழுமையாக கிடைத்ததே! என்றெண்ணி, மெகா ஃபோனில் கேட்டார். ‘எல்லாம் ஓகே தானே?’ ‘ஓ எஸ், நான் ரெடி!’ என்றார் அந்த கேமராமேன், ‘நீங்க ஆக் ஷன் சொல்ல வேண்டியதுதான் பாக்கி!’
பிரபல டைரக்டர் சிஸில் பி டிமிலி பற்றி சொல்லப்படும் நிகழ்ச்சி அது.
Cecil B DeMille... இன்று பிறந்த நாள்.
உடனே நினைவுக்கு வருவது 'Ten Commandments' & 'King of Kings'. ரெண்டையும் அவரே Silent Era -வில் முன்பு எடுத்திருக்கிறார் என்பது நியூஸ். ஹாலிவுட்டை உலக சினிமாவின் முக்கிய இடமாக மாற்றியவர் என்றிவரைக் கொண்டாடுகிறார்கள். அதன் முதல் 'முழு நீளத் திரைப் படத்'தை எடுத்தவர் என்ற பெருமை இவருக்கு உண்டு. ‘The Squaw Man’ என்ற இவரது மௌனப்படம்!
பிரம்மாண்டம் என்ற வார்த்தைக்கு எதுகை இவர். பிரமிக்க வைப்பது இவருக்கு பிஸ்கட் சாப்பிடுவது போல. பார்ட்னர் இருவருடன் இவர் தொடங்கிய படக் கம்பெனிதான் பின்னால் பாரமவுண்ட் ஆனது. நடிகர்களுக்காக செலவழிக்கும் பணத்தை தயாரிப்பில் செலவழிப்பது பெட்டர் என்று நினைப்பவர்.
‘மக்களின் அபிப்பிராயம் எப்போதும் சரியாக இருக்கும்.. மக்களுக்காகத்தான் படம் எடுக்கிறேன், விமர்சகர்களுக்காக அல்ல!’ சொல்லும் இவர் படங்களைப் பார்த்த ஆடியன்ஸைக் கணக்கிட்டால் மொத்தம் நாலு பில்லியனுக்கு மேல் வரும்!
சும்மா கதையை மட்டும் கேட்டிட்டுப் போக வரலை மக்கள் என்பது இவர் ஐடியா. படத்தின் மற்ற கலை அம்சங்களில் இவர் படு கவனம்! ஏன், இவர்தான் முதல்முதலாக 'ஆர்ட் டைரக்டர்' என்றொரு ஆளைப் போட்டவர்.
ஒரிஜினல் பி.டி.பார்னம் சர்க்கஸ் கம்பெனியை வைத்து இவரெடுத்தது ‘The Greatest Show on Earth’. சிறந்த படம், சிறந்த கதை என ரெண்டு ஆஸ்கார் அதற்கு.
‘பத்துக் கட்டளைகள்’… .அதற்காக 18 மைல் அகலத்தில் அவர் நிர்மாணித்த எகிப்திய நகரம்! 120 அடி உயர சுவர்கள்.. 35 அடி உயர சிலைகள்.. அஞ்சு டன் எடையில் ஏராளம் sphinx... 2,000 பேருக்கு மேலான கலைஞர்களும் மற்றவர்களும் தங்குவதற்கு 1000 டெண்ட்கள்! (தைக்கப்பட்ட உடைகளின் நீளத்தை அளந்தால் 15 மைலுக்கு மேலே.) முடிந்ததும் இடித்துப் புதைத்த நகரத்தைப் பற்றி இன்னமும் பேசும் லோக்கல் மக்கள்.
ஏகத்துக்குச் சிரத்தை வித்தையில். 75 வயதில் எடுத்த 'King of Kings' படப்பிடிப்பில் ரொம்ப உயரம் ஏறியபோது நேர்ந்த ஹார்ட் அட்டாக்… இரண்டே நாள் ஓய்வில் ஷூட்டிங் திரும்பிவிட்டார். அந்தப் படத்தில் தன் சம்பளம் அனைத்தையும் கொடுத்தது தர்மத்துக்கு. அமெரிக்கன் பிலிம் இன்ஸ்டியூட் தேர்ந்தெடுத்த தலைசிறந்த பத்துத் திரைக்காவியங்களில் ஒன்று அது.
டேக் எடுக்கும்போது யாராவது பேசினால் உடனே செட்டை விட்டு அகற்றி விடுவார். ஒருமுறை இவர் சீக்கிரமே ஆபீசுக்குத் திரும்பியபோது செகரட்டரி கேட்டாளாம், ‘என்ன, டேக்கின்போது பேசினீங்களா?’

ஒரு நிமிடத்தில்...


தி ஷங்கர் டச் ரொம்ப விசேஷமானது. ஒவ்வொரு காட்சியிலும் மைண்ட் தொடும். ரியாலிடிக்கு எத்தனை க்ளோஸாகப் போக முடியுமோ அத்தனை க்ளோஸ் ஆகப் போவார், ஆனால் ‘ட்ராமாடிக்’ ஆக! ஒவ்வொரு சீனும் ‘டிக்’ ஆகி விடுவது இப்படித்தான். கதையிலும் சரியான இடத்தை டச் பண்ணி அதை கோல்டன் டச் ஆக்கிவிடுவார். இந்தப் படத்தில்….
இந்தியன் 2 .. மிகவும் ரசித்தேன். (Spoiler Alert)
படத்தின் ஒன்லைனை முதல் ஒரு நிமிட காட்சியிலேயே சொல்லி விடுகிறார். நிற்கும் இடத்தை அசுத்தப்படுத்திக் கொண்டே சுத்தமான நாட்டை எதிர்பார்க்கும், அடுத்தவனை ‘பார்த்துப் போகச் சொல்லும்' அந்த ஆளைக் காட்டும் போதே விளங்கி விடுகிறது.
அப்பா லஞ்சத்தில் பணத்தை அள்ளுகிறார். ஒரு பெண் இறப்பதற்கும் காரணமாக இருக்கிறார். மகனே அவரைக் காட்டிக் கொடுக்க, கைதாகிறார். மனைவி அதனால் இறந்து விடுகிறாள். அவள் முகத்தை பார்த்துவிடத் துடிக்கிறான் மகன்.. உறவினர்களும் பக்கத்து வீட்டு பெண்களும் அவனை உள்ளே விடாமல் துரத்துகிறார்கள்..
‘COMEBACKINDIAN’ சொன்னவர்களே ‘GOBACKINDIAN’ சொல்லும் நாள் வருவது கவிதை திருப்பம்! அதற்கான காரணம் கதையின் எதார்த்தம்!
சதைப் பிடிப்பான ஒரு கதை வைத்திருக்கிறார். அதற்குள் வருவதற்குள்…
ரசிகர்களின் ஏமாற்றம் புரிகிறது. இந்தியன் தாத்தா வந்தால் என்ன பண்ணுவார்? இப்ப இதைப் பண்ணுவார், இப்ப இப்படி அடிப்பார், இப்ப இப்படி நடக்கும்.. இப்படி தெரிஞ்சுக்கிட்டே இருந்தா எப்படி ரசிக்க முடியும்? ஆக குற்றவாளிகளுக்கு அவர் கொடுக்கும் பனிஷ்மென்ட் காட்சிகள் எல்லாம் ஒரு ரீ ரன் மாதிரி அலுத்து விடுகிறது. அதை புதுவிதத்தில் காட்ட முயலும் டைரக்டருடைய சின்ஸியாரிடி வேஸ்ட் ஆகுது. அதே பிரசினைக்காக சேனாபதி திரும்ப வராமல்..வேறு எத்தனையோ விஷயம் இருக்கே, அதுல ஒண்ணுக்காக அவர் திரும்ப வந்திருந்தால் ஆட்டம் புதுசாக இருந்திருக்கும். ரசிகர்களின் ஆர்ப்பரிப்பும்!
கிரேவ்யார்டு காட்சியில் கமலின் அந்த restrained act … ஏமாற்றம், வருத்தம், அதிர்ச்சியை விழுங்கிக் கொள்வது…எந்த அதிரடியான முக பாவங்களையும் கொடுக்காமலேயே அவர் மனதில் என்ன எண்ணம் ஓடுகிறது என்று நமக்கு தெரிகிறது. கூர்ந்து கவனிக்கிற மாணவர்களுக்கு அங்கே ஒரு ஆக்டிங் கிளாஸ் நடக்கிறது.
கிரிஸ்ப் ஜோக்குகளுக்கு பஞ்சமே இருக்காது ஷங்கர் படத்தில்.. ‘நக்கலா?’ ‘நிக்கல்!’ ஒன்று போதும். காட்சி ஒவ்வொன்றிலும் கடைசி ஷாட் வசீகரமாக இருக்கும். உதாரணம் ‘தாத்தா டாய்பேயிலே என்னடா பண்ணிட்டு இருக்காரு?’ என்று சித்தார்த் கேட்பது. வில்லன் உடலில் தவழும் ஆமையின் அடி வயிற்றில் வாசகம்…
விமான நிலையத்தில் அத்தனை பேருக்கிடையே சேனாபதியைக் கண்டுபிடித்தது எப்படி என்று சிம்ஹா சொல்லுவது இன்டெலிஜென்ஸீன்.
‘அஞ்சே நிமிஷத்தில முடிச்சிடறேன்’னு விரலைக் காட்டி கமலுக்கு எண்ட்ரி ஷாட் கொடுப்பதாகட்டும், ‘மை ஐ.டி.’ என்று விரல்களைச் சொடுக்கும் விதமாகட்டும்… எலிகண்ட்! அதே நிதானத்தில் படம் நெடுக…
“எல்லாத்தையுமே காசாக்கிற அரசியல் வாதிகள்! எல்லாத்திலேயுமே காசு வாங்கற அதிகாரிகள்!”
“இந்த நாட்டில வேலை இல்லாதவனைவிட வேலை நேரத்தில வேலை செய்யாதவன் தான் ஜாஸ்தி.”
“இங்கே எல்லாரும் குடும்பத்துக்காக எதை வேண்டுமானாலும் விட்டுக் கொடுப்பாங்க ஆனால் யாரும் குடும்பத்தை விட்டுக் கொடுக்க மாட்டாங்க!” வசனங்கள் செம க்யூட்!
புதுமைக் காட்சிகளுக்கும் பஞ்சமில்லை. ஜீரோ டாலரன்ஸ் என்று கிளம்பும் இவர் ஜீரோ கிரேவிடியில் செவ்வாயில் சஞ்சரிக்க பிராக்டிஸ் செய்யும் தொழிலதிபரை அந்தரத்தில் அந்தரங்கமாக சந்திப்பது… இறுதி சேஸ் காட்சிகளில் கமலின் சைக்கிள் வீல் வேகத்தில் எடிட்டிங்கும் பாய்கிறது.
‘பால்வெளி பாதை மேலே.. மேகமாய் உலாவலாமே..’ பாடலில் “வெண்ணிலா வேர்வை கொஞ்சம்.. மின்மினி முத்தங்கள் கொஞ்சம்.. கடவுளின் சிரிப்புகள் கொஞ்சம்.. நாம் காணவே..” என்று வரிகள் வசீகரிக்கின்றன... மற்ற படங்களைப் போல் இல்லாமல் அனிருத் அடக்கி வாசித்து இருக்கிறார் பின்னணி இசையை. படத்தின் mood-க்கு பொருத்தமாக. கடைசிக் காட்சியில் அந்த மனம் பிசைகிற வயலின் இசை..
உண்மைத் தாம்பாளத்தில் ஃபேண்டஸி கலர்ப் பொடி தூவி அழகு காட்டுவார். ‘பிரம்மாண்டம் ஐம்பது பர்சண்ட், ஃபேமிலி டிராமா ஐம்பது,’ தான் ஷங்கர் ஃபார்முலா. இதிலும்! பிந்தைய பாதிதான் மனம் கவருகிறது.
“தப்பு பண்றவன் எல்லாம் வேறெங்கேயோ இல்ல, நம்ம தெருவிலேயோ பக்கத்து வீட்டிலேயோதான் இருக்கிறான். ஏன் நம்ம வீட்டிலேயே…” என்று திரைக்கதையின் மையத்தை சுட்டிக்காட்டும் அந்த கமலின் live talk ஆழமாகவும் நேர்த்தியாகவும்! ஆனால்…
பிக் பட்ஜெட் படம் என்றாலே தப்பித் தவறிக்கூட அதில் யதார்த்தம் இருந்து விடக்கூடாது, fantasy தான் ஜாஸ்தியாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பு வேரூன்றி விட்டது இங்கே. “வெறும் கை முஷ்டியாலேயே நூறு பேரை வீழ்த்தும் நம்ம ஹீரோவிடம், அது என்ன மர்மம் என்று ஒரு நாளாவது கேட்டிருப்போமா? அப்புறம் எதுக்கு வர்மம், அது எப்படி பாதிக்குதுங்கிற விவரம்? நான் கேட்டேனா?” என்கிறார் நம்ம ஆளு.
இன்றைய நாட்டு நடப்பையும் மக்கள் மனநிலையையும் அழுத்தமாக ஒரு கதையாக ஆக்கியிருக்கிறார் ஷங்கர். ரசித்துப் பாருங்கள் என்றும் சொல்வதோடு யோசித்து, பாருங்கள் என்றும் சொல்கிறார்கள்.
திமிங்கலமே தான்! நெடுமுடி வேணு ஒரு இடத்தில் சொல்கிற மாதிரி.

அம்னீஷியாவுக்கு அம்னீஷியா...


திரையுலகைப் பொறுத்தவரையில் அம்னீஷியாவுக்கு அம்னீஷியாவே கிடையாது.
1941 இல் வந்த படம் அது. ஜூலியட்டை திருமணம் செய்துகொண்ட ரோட்னி. கல்யாணத்துக்கு வர முடியாத அவள் கஸின் லாராவின் ஊருக்கு ஹனிமூன் கிளம்புகிறான். அவனின் பழைய காதலி நண்பனுடன் வந்து அவனைக் காரில் அழைத்துச் சென்று பிளாக் மெயில் செய்கிறாள். பணம் தர மறுத்தவனை மண்டையில் தாக்க, கார் ஆக்ஸிடெண்ட் ஆக, ரோட்னிக்கு அம்னீசியா. தான் யாரென்றே தெரியவில்லை அவனுக்கு. பாக்கெட்டில் இருக்கும் லாராவின் அட்ரஸ் தான் ஒரே க்ளூ.
வேறு வழியின்றி அங்கே போகிறான். அவளோ இவனைப் பார்த்ததில்லை. தன் தோட்டத்தில் ஏதோ ஒரு வேலை போட்டுத் தருகிறாள். காதல் மலர்ந்து திருமணம் ஆகிறது. ஹனிமூனுக்கு, எஸ், நீங்க நினைக்கிற மாதிரியே, கஸின் ஜூலியட் ஊருக்கு போகிறார்கள். கார் ஆக்ஸிடெண்டில் இறந்துவிட்டான் என நினைத்திருந்த ஜூலியட் கோஷ்டி இவனைப் பார்த்து திகைக்கிறது. டாக்டர் கொடுத்த ட்ரீட்மெண்டில், யெஸ், நீங்க நினைக்கிற மாதிரியே, நினைவில் முதல் கல்யாண முன்னிரவுக்கு முன்போய்விடுகிறான்.
இப்போ லாராவுக்கு பிரச்சனை. நடந்ததெல்லாம் சொல்லி முத்தமிட்டு அவனை ப்ரஸண்ட் டென்ஸுக்குக் கொண்டு வருகிறாள். தன் காதல் இங்கேதான் என்றறிந்தவன் ஜூலியட்டுக்கு தன்னை 'இறந்தவனாகவே' காட்டி விட்டு அவளுடன் எஸ்கேப்!
'Kisses for Breakfast' என்ற அந்த பிரபல படத்தில் லாராவாக அசத்தியவர்... Jane Wyatt இன்று பிறந்த நாள்!
'One More River' -ல் என்டர் ஆனவர் Frank Capra வின் 'Lost Horizon' இல் சென்டர் ஆகி பிரபலம் ஆனார்.
அந்த டிவி சீரிஸ், 'Father Knows Best', புகழ் வாங்கித் தந்தது என்றால் 'Star Trek', மற்றொரு டிவி சீரிஸ், மிக அதிகமாக ரசிகர் கடிதம் பெற்றுத் தந்தது.

Monday, August 11, 2025

புத்தியைத் தீட்டியதில்...


வெரி வெரி மோசமான ‘பெரிபெரி’ என்ற அந்த நோய்க்கான காரணத்தை கண்டுபிடித்தாகவேண்டும் அவர். புத்தியைத் தீட்டியதில், தீட்டிய அரிசியைத் தீனியாக கொண்ட போது மட்டுமே கோழிகளுக்கு அந்த நோய் வந்ததைத் தெரிந்து கொண்டவர், தவிட்டில் இருக்கிறது சூட்சுமம் என்று தவித்தார். அதிலிருக்கும் அந்த ஏதோ ஒன்று என்னவென்று அவர் நண்பர் கண்டுபிடித்தார்.
இந்த வைட்டல் டிஸ்கவரியில்தான் வைட்டமின் முதன்முதலாக கண்டுபிடிக்கப்பட்டது. Vital -ஐயும் amine (நைட்ரஜன் காம்பவுண்ட்) -ஐயும் சேர்த்து ‘வைட்டமின்’ பேர் வைத்தவர் மற்றொரு நண்பர்.
Christiaan Eijkman. இன்று பிறந்த நாள்! (1858 - 1930)
பல ஊகங்களை உடைத்தெறிந்தவர். வெப்பப் பிரதேசங்களில் வாழ நேரும் ஐரோப்பியர்களுக்கு அப்படியொன்றும் மெட்டபாலிசம் மாறிவிடுவதில்லை என்று காட்டினார். வேலையைப் பொருத்தே வேர்க்கும் யாராயிருந்தாலும்! எண்ணிக்கையில் சிவப்பு அணுக்கள் எல்லோருக்கும் ஒன்றுதான், என்றார்.
நோபல் கிடத்தது 1929-இல்.

6000 வார்த்தைகள்...


சிறுவர்களுக்கு கதை எழுதுவது சாமானிய விஷயமல்ல. சாமர்த்தியமான பிளாட் இருக்கணும். சிறுவர்களுக்கே உரித்தான கோட்டில் பயணிக்க வேண்டும். வளவள வர்ணனைக்கு நோ.
சமீப அரசியை அறிவோம். சென்ற நூற்றாண்டில் ஆண்டவர் ஒருவர் உண்டு. கையா, A. I.யா என்று சந்தேகப்படும் அளவுக்கு எழுதிக் குவித்தவர் எனிட் ப்ளைடன்.
Enid Blyton... இன்று பிறந்த நாள்.


Famous Five ஃபேமஸ் என்றால் Secret Seven சிறுவர் ஹெவன். ரெண்டையும் நோண்டவில்லை என்றால் நீங்கள் சிறுவயது தாண்டவில்லை. ஒரு நொடி, ஒரு Noddy காமிக்ஸ் படிக்க ஆரம்பித்தால் அடியோடு மறந்து விடுவீர்கள் இந்த அவஸ்தை உலகத்தை. நோடியைப் படித்ததும் நோய் நொடி எல்லாம் பறந்துவிடும்!
சாம்பிளுக்கு இதோ ஒரு கதை...
டீச்சரின் மேஜையில் இருந்து பணம் திருடிய சிறுமி எலிசபெத் காணாமல் போய் விடுகிறாள். அவள் பாட்டி வசிக்கும் கிராமத்துப் பக்கம் அவளைக் கண்டதாகச் சொல்கிறார்கள். பக்கத்து கிராமத்தில் இருக்கும் ஸீக்ரெட் ஸெவனுக்கு கிடைத்தது கேஸ். களம் இறங்குகிறார்கள்.
பாட்டியை விசாரித்தால் தினமும் தின் பண்டங்கள் காணாமல் போவதாக சொல்கிறார். ஊரைச் சுற்றித் தேடுகிறார்கள். பக்கத்தில் இருக்கும் குதிரை லாயத்தில் வேலை பார்க்கும் டாம் என்ற பையன் அவளைப் பார்த்ததாக சொல்கிறான். லண்டன் போய் பிரான்ஸுக்கு தன் சகோதரனை பார்க்க போவதாக அவள் சொன்னாளாம்.
லண்டன் போய் இருந்தால் இங்கே பண்டம் திருடு போவது எப்படி? அன்றிரவு போலீஸ் ஒரு பக்கம், ஸீக்ரெட் 7 ஒரு பக்கம், டாம் ஒரு மரத்தில் ஏறி... என்று வீட்டைச் சுத்தியிருந்து வேவு பார்க்கிறார்கள். ஆனால் அன்றைக்கும் பட்சணங்கள் அபேஸ். எப்படி?
இதற்கிடையில் அவள் சகோதரன் வந்து சேர்கிறான். அவனைப் பார்த்ததும் ஸெவனில் ஒருவனுக்கு சந்தேகம் தட்டுகிறது. அவனை அழைத்துக்கொண்டு டாமைப் பார்க்கப் போகிறார்கள். கண்டதும் குதிரைக்குட்டியில் ஏறி டாம் விரைய, நிறுத்திப் பார்த்தால் அவன்தான் எலிசபெத். ஆண்பிள்ளை வேடத்தில். அவள் பணத்தைத் திருடவில்லை என்றும் தெரிகிறது. வாரச் சம்பளம் கிடைக்கும் வரை வயிற்றுப்பசி. ஆகவே பாட்டி வீட்டிலிருந்து! சம்பவத்தன்று மரத்திலிருந்து மாடியில் இறங்கி தின்பண்டம் எடுத்துக் கொண்டு திரும்பி மரம் வழியாகவே வந்து கண்முன்னே அவர்களை ஏமாற்றியதை சொல்கிறாள்.
சின்ன கவிதை ஒன்றில் ஆரம்பித்து 600 புத்தகங்களுக்கு அசுர வளர்ச்சி. 42 மொழிகளில் 60 கோடி பிரதி விற்பனைக்கு. நாளொன்றுக்கு அவர் டைப் ரைட்டர் கக்கும் வார்த்தைகள் 6000.
1996 இல் அவரது எழுத்துச் சொத்தை மிகக்குறைவாக கொடுத்ததிலேயே 14 மில்லியன் பௌண்ட் குடும்பத்துக்கு கிடைத்தது.
குழந்தைகளுக்கு அம்மா முக்கியம் என்று சொல்லும் இவர் குடும்பத்தையும் கவனித்துக் கொண்டு எழுத்தையும் ஜனித்துக் கொண்டவர்.
Quotes?
‘எதையாவது யாருக்காகவேனும் விட்டுச் செல்லுங்கள். ஆனால் எதற்காகவும் யாரையும் விட்டுச் செல்லாதீர்கள்.’
‘பராமரிக்க முடியாத ஒன்றை வைத்திருக்க உங்களுக்கு உரிமை இல்லை.’
‘வளர வளர நம் முகத்தை நாமே உருவாக்கிக் கொள்ளுகிறோம்.’

Sunday, August 10, 2025

காமிரா ஜாலம்...


ஒரு க்ரேன்; ஒரு ஜூம் லென்ஸ் இரண்டையும் வைத்துக்கொண்டு ஜாலம் பண்ணியிருக்கிறார் ஒளிப்பதிவாளர் தம்பு.

முழுப்பாடலையும் ஒரே ஷாட்டில் படமாக்கி... ஒரு சாதனை.. 1962 -லேயே!
மாடியிலிருந்து கீழே ஜெமினிக்கு மெள்ள இறங்குவதும் அவர் மேலே வந்ததும் வலம் நகர்ந்து அவரை சரோஜாவிடம் அழைத்து வருவதுமாக காமிர பின்னுகிறது, என்னவொரு gliding movement!
படம்: ஆடிப்பெருக்கு. டைரக்டர் கே. சங்கர்.
பாடல்:
இதுதான் உலகமா...இதுதான் வாழ்க்கையா...
இதுவரையில் வாழ்க்கை காணாற்று வெள்ளமா?
(இசை ஏ எம் ராஜா)
மாடியில் சரோஜா தேவி சோகமாய்ப் பாட, கீழிருந்து கேட்டு மேலே வரும் ஜெமினி. காமிரா மேலே பேன் செய்கிறது, லாங்க் ஷாட்டிலிருந்து குளோஸப்பிற்கு ஜூம் இன் ஆகிறது, கீழே இறங்குகிறது, மறுபடி மேலே வருகிறது...
முழுப் பாடலையும் ட்யூனோடு நினைவு வைத்து 100% sink உடன் முகபாவங்களில் ஆழம் தவறாமல் நடித்த சரோஜா தேவிக்கும் கைநிறைய க்ளாப்ஸ்!

Friday, August 8, 2025

அத்தனை பேரும் கலைஞர்களாக...


‘உங்களை மிக அழகானவராக கற்பனை செய்து கொள்ள வேண்டியதில்லை, ஏனெனில் நீங்கள் மிக அழகானவர்.’
சொன்னவர் யார்?
மூமின்ஸ் என்ற காமிக்ஸ் ஸ்ட்ரிப்ஸ் மூலமாக பூமியில் பிரபலமான நபர் அவர். (Moomins)
பின்லாந்தின் முன்னணி பெண் எழுத்தாளர்களில் ஒருவர். புகழ்பெற்ற ஓவியரும் கூட.
குடும்பத்தில் அத்தனை பேரும் கலைஞர்களாக இருக்கும் போது அதில் வளரும் ஒருத்தி மிகச்சிறந்த படைப்பாளியாக மாறக் கேட்கணுமா?
குழந்தைகளுக்கு எழுதுவதிலும் பெரியவர்களுக்கு எழுதுவதிலும் வல்லவர்.
Tove Jansson. இன்று பிறந்தநாள்!


இன்னும் சொன்னவை சுவையானவை:
‘நீண்ட பிரயாணம் மேற்கொள்ள வேண்டும் நீங்கள், வீடு எத்தனை அற்புதமானது என்பதை கண்டுகொள்ள.’
‘ஒருவன் எல்லாவற்றையும் தானே கண்டுபிடித்தாக வேண்டும்; தானே அதிலிருந்து விடுபட வேண்டும்.’
‘யாரையேனும் அளவுக்கதிகமாக பிரமித்தால் சுதந்திரமாக இருக்கவே முடியாது.’
‘எல்லா விஷயங்களுமே மிகவும் நிச்சயமற்று இருக்கின்றன; அதுவேதான் என்னில் மீண்டும் நம்பிக்கை ஏற்படுத்துகிறது.’
‘பாலத்தில் படுத்துக்கொண்டு வெள்ளம் பாய்வதைக் கவனியுங்கள்; சிவப்பு பூட்ஸ்களை அணிந்துகொண்டு ஈர நிலத்தில் சிரமப்பட்டு ஓடுங்கள்; அல்லது மாடியில் உருண்டபடி கூரையில் மழை விழுவதை கேளுங்கள். தனக்குத்தானே அனுபவிப்பது ரொம்ப சுலபம்!'
‘உள்ளபடியே கடவுள் உதவுகிறார், ஆனால் நீ சொந்தமாக ஒரு முயற்சியாவது செய்த பிறகு தான்.’
‘மொத்தத்தில் இவ்வளவுதான் விஷயம்: ஒரு போதும் களைப்படையாதீர்கள், உற்சாகத்தை இழந்து விடாதீர்கள், வெறுமே இருந்துவிடாதீர்கள் - விலைமதிப்பற்ற உங்கள் ஆர்வத்தை இழந்து உங்களை சாக விட்டுவிடாதீர்கள். அவ்வளவுதான், விஷயம் ரொம்ப சிம்பிள்.’

கடவுளின் செல்ல சப்ஜெக்ட்..


விஞ்ஞானம் கடவுளின் செல்ல சப்ஜெக்ட்! உள்ளே செல்லச் செல்ல சுவாரசியம் விரிந்துகொண்டே போகும்...

இப்ப பாருங்க… ஆக்ஸிஜன், நைட்ரஜன், ஹைட்ரஜன்... எல்லாம் வாயுக்கள். தெரியும். எல்லா வாயுவும் மாலிக்யூல்களால் ஆனது. அறிவோம். ஒரு கப் ஹைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக் கணக்கில் ஹைட்ரஜன் மாலிக்யூல்கள் இருக்கும். ஆமா, சரிதான். போலவே ஒரு கப் நைட்ரஜனை அள்ளிக் கொண்டால் அதில் ஆயிரக்கணக்கில் நைட்ரஜன் மாலிக்யூல்கள். இந்த ரெண்டு கணக்கும் எக்ஸாட்லி ஒரே நம்பராக இருக்கும்னு நினைச்சுப் பார்த்திருப்பீங்களா? ஒண்ணாதான் இருக்கும். ஒரே கன அளவுள்ள எந்த வாயுவை எடுத்துக் கொண்டாலும் அதில் ஒரே எண்ணிக்கை மாலிக்யூல்கள்தாம் இருக்கும் (ஒரே வெப்பம் & அழுத்தத்தில்) அது தான் 'ஆவாகாட்ரோ' விதி. ஆரோ அது? அவருதாங்க அதைக் கண்டு பிடிச்சது.. 200 வருஷம் முன்னாடியே…
Amedeo Avogadro... இன்று பிறந்த நாள்!
படித்தது முதலில் சட்டம். ஆர்வத்தில் நுழைந்தது விஞ்ஞானம். வாழ்ந்த காலத்தில் உரிய பாராட்டு வழங்கப் படாதவர்களில் ஒருவர்.

அம்மாவும் ஆகி...



79 இல் வந்த படம்... அதன் பின் அதே மாதிரி கதை நிறைய வந்துவிட்டனதான். என்றாலும்...
வேலைப் பிரியரான கிரேமர் பிரமோஷன் ஒன்றை வாங்கிக்கொண்டு வீட்டுக்கு வரும்போது மனைவி ஜோனா அவனைப் பிரிந்து செல்ல தயாராக இருக்கிறாள். அப்பாவை வெறுக்கும் மகனை அவன் பொறுப்பிலேயே விட்டுவிட்டு! வீட்டையும் மகனையும் கவனிப்பதில்லையாம் அவன்!
அம்மாவும் ஆகி, திணறும் கணவன் வேறு வழியில்லாமல் சாதாரண வேலைக்கு இறங்குகிறான். கொஞ்சம் கொஞ்சமாய் மகனின் இதயத்தில் இடம் பிடிக்கிறான்.
இப்போது அவள் வருகிறாள் மகனைக் கேட்டு. வழக்கில் அவன் பக்க நியாயங்கள் வெளிப்பட்டாலும் முடிவு அவளுக்கு சாதகமாக. அப்பீலுக்கு போகலாம்தான், ஆனால் சின்ன பையன் தலையில் தேர்ந்தெடுக்கும் பெரிய சுமை விழுமே என்று விட்டுக் கொடுக்கிறான்.
பையனை அழைத்து போக மறுநாள் காலை வருகிறாள் ஜோனா. அவள் விட்டுப் பிரிந்த முதல் நாள் தயாரித்த அதே காலை டிபன். அப்பாவும் மகனுமாக தயாரிக்கிறார்கள். தன்னைவிட அவனிடமே பையன் ஹோம்லியாக இருப்பதைச் சொல்லி விட்டு வெளியேறுகிறாள் தனியே.
கிரேமராக நடித்தவருக்கு எப்படியோ, நமக்கு ‘Kramer Vs Kramer’ மறக்க முடியாத படம். அவருக்கும் அப்படித்தான் இருக்க வேண்டும். ஆஸ்கார் வாங்கித் தந்தது ஆயிற்றே?
Dustin Hoffman... இன்று பிறந்த நாள்.
‘என்னாலே தானே அம்மா பிரிந்து போனாள்?’ என்று கேட்கும் மகளிடம் பொறுமையாக, ‘உன் அம்மாவை அவளாக இருக்க விடாமல் என் விருப்பப்படி அவளை மாறச் செய்தேன். அவளைக் கவனிக்கவோ கேட்கவோ எனக்கு நேரமில்லை. முடிந்தவரை முயன்று பார்த்துவிட்டுத்தான் அகன்றாள். உனக்காகத்தான் இன்னும் சில நாள் இருந்தாள்..’ என்று அரவணைக்கும் காட்சியில் பையனின் & நம் இதயம் தொடுவார். ஆஸ்காரையும்!
ஆரம்பப் படங்களில் ஒன்றான ‘The Graduate’ படத்திலேயே எல்லோரையும் தன்னைக் கவனிக்க வைத்தவர். 1967 இன் நம்பர் ஒன் வசூல் படம் அது.
'Midnight Cowboy' படத்தின் ஹீரோ ரோலை அவர் கைப்பற்றிய விதமே அலாதி. காஸ்டிங் டைரக்டரை இவர் ஒரு தெருமுனையில் சந்திப்பதாக ஏற்பாடு. கந்தல் ஆடையும் கிழிந்த கோட்டும் பிய்ந்த ஷூவும் அணிந்து வர்றவர் போகிறவரிடம் காசு கேட்டுக்கொண்டிருந்த ஹாஃப்மேனை அடையாளம் கண்டுபிடிக்கவே கொஞ்ச நேரம் ஆயிற்று அவருக்கு. அந்த மாதிரியான ஒரு ரோல் அது.
இளைஞராக இருந்த போதும் சரி வயதானவரான போதும் சரி, பிரதான காரெக்டர்களில் பிரமாதமாகப் பண்ணியவர். ‘Kung Fu Panda’ வில் Shifu வின் வாய்ஸ் இவருதான்.
வாங்கிய மற்றொரு ஆஸ்கார் Tom Cruise உடன் நடித்த 'Rain Man'-க்காக.
கூட உட்கார்ந்து திரைக்கதை எழுதுவார் ஆனால் திரையில் பேர் போட்டுக்கொள்ள பிரியப் பட்டதில்லை.
தமாஷான ஒரு Quote? ‘வெற்றி அடைஞ்சதில ஒரு சந்தோஷம் என்னன்னா சாவதைப் பற்றிய பயம் போயிடுச்சு. ஸ்டார் ஆயிட்டீங்கன்னா, ஏற்கனவே நீங்க செத்துப் போயாச்சு. பாடம் பண்ணியாச்சு.’

Tuesday, August 5, 2025

ஹாலிவுட்டின் மனோரமா...


1950 களில் கலக்கிய டிவி ஷோ அது. ‘I Love Lucy.’ பிரமாதமாகப் போய்க் கொண்டிருந்தது. நாயகி பிரபல காமெடி நடிகை. அவரும் கணவரும்தாம் தயாரிப்பாளர்கள். தான் குழந்தை பெற்றுக் கொள்ளப் போவதை அறிவித்தார் நாயகி, வேறு நடிகையைப் போடலாமென்று நினைத்து. அதையே கதையிலும் கொண்டு வந்துவிடலாம் என்றார் தலைமைக் கதாசிரியர். அப்படியே நடந்தது. அந்த 1953 ஜனவரி 19 அன்று நிஜத்தில் குழந்தை பிறந்த அன்று கதையிலும்!
அந்த நடிகை Lucille Ball… ஹாலிவுட்டின் மனோரமா! இன்று பிறந்த நாள்! (1911-1989)
நாலு வயதில் தந்தையை இழந்தவர். பள்ளிக்கூடத்தில் பென்சில்கூட வாங்க முடியாத வறுமையான இளமை. நாடகப் பள்ளியில் சேர்ந்தபோது, ரொம்ப வெக்கப் படறே, டயத்தை வேஸ்ட் பண்ணாதே என்று திருப்பி அனுப்பப் பட்டவர் மிகப் பிரபல நடிகையாகி இரண்டாம் வரிசை படங்களின் அரசியானார்.
மாடலிங், ரேடியோ, டிவி, சினிமா என்று கலக்கியவர். நாடகத்தில் நடிக்க நேரில் கேட்டபோது சேர்த்துக் கொள்ளாதவரை மாடலாக இருந்த போது வெளியான போஸ்டர் சினிமாவில் கொண்டு சேர்த்தது. Bob Hope உடன் ஜோடியாக உயர்ந்தார்.
சொந்த ஸ்டூடியோ வைத்த முதல் பெண்மணி. மூன்று கேமரா உபயோகித்து டிவி ஷோ எடுப்பதை முதலில் ஆரம்பித்து வைத்தது இவர்தான். பிரபல ‘Star Trek’ சீரியலை தயாரித்ததும் இவர் கம்பெனி தான்.
இவரது ‘Lucy and Superman’ எபிசோடில் George Reeves சூபர்மேனாக நடித்தார். டைட்டிலில் அவர் பேரைப் போட சம்மதிக்கவே இல்லையே இவர்? Superman இருக்கிறார்னு நம்பும் குழந்தைகளை ஏமாற்றலாகாது என்று!
“என்னை வெச்சு காமெடி ஒண்ணும் பண்ணலையே?”ன்னு கேட்க மாட்டார், ஏன்னா தன் காமெடி நடிப்புக்குக் காரணம் வசனகர்த்தாவும் டைரக்டரும்தாம் என்று சொல்பவராயிற்றே!
Quote?
‘அதிர்ஷ்டத்தில் எனக்கு நம்பிக்கை இல்லை. என்னைப் பொறுத்தவரை அதிர்ஷ்டம் என்பது கடும் உழைப்பும் எது சரியான சந்தர்ப்பம், எது இல்லை என்று புரிந்து கொள்வதும் தான்.’
‘உங்களுக்கு எது முடியாது என்பதைத் தெரிந்து இருப்பது உங்களுக்கு எது முடியும் என்பதைத் தெரிந்து இருப்பதைவிட முக்கியமானது.’
‘முதலில் உன்னை நேசி. எல்லாம் சரியாகிவிடும். எல்லா விஷயங்களையும் நடத்த வேண்டுமானால் உன்னை உண்மையாக நேசிக்க வேண்டும்.’

சிறுகதையின் தந்தை...


அந்தக் கதையை அனேகமாக நீங்கள் படித்திருப்பீர்கள். பல மொழிகளில் வெளியான பிரபல கதை...
அவளுக்கு படோபடோபமாக உடுத்துவதிலும் பளிச்சென்று நகையணிவதிலும் கொள்ளை ஆசை. கணவனோ ஒரு சாதாரண வேலையிலிருப்பவன். சராசரி உணவிலேயே மகிழ்பவன். இந்த சாதா வாழ்க்கையில் சதா மனம் வெம்பி வாடுகிறவளை குஷிப்படுத்த அவன் ஒருநாள் பெரிய பார்ட்டி ஒன்றுக்கு அழைப்பைக் கொண்டு வருகிறான்.
அவளோ, "என்னத்தை அணிஞ்சிட்டுப் போறது அங்கே? எல்லா பெண்களும் பிரமாதமா வந்திருப்பாங்களே!" யோசித்து யோசித்து கடைசியில் அவளது பணக்கார பால்ய தோழியிடம் சென்று நகை இரவல் கேட்கிறாள். சம்மதித்த அவளிடமிருந்தவற்றில் ஒரு டைமன்ட் நெக்லஸைப் பொறுக்கி எடுக்கிறாள். போட்டுக் கொண்டு பார்ட்டிக்கு போனால் எல்லாரும் அவளைக் கவனிக்க அவள்தான் centre of attraction. ஒரே உற்சாகம்.
காலை நாலு மணிக்கு டாக்ஸி பிடித்து வீட்டுக்கு வந்தால் கழுத்தில் நகையைக் காணோம். எங்கே போனது? வழிநெடுக தேடிப் பார்க்கிறான். கிடைக்கவில்லை. இப்ப என்ன செய்வது?
கடையில் கேட்டால் அதைப் போல ஒரு நகை 40000 என்கிறார்கள். அவனுடைய சேமிப்புகள் இதற்கு உறை போடக் காணாது. சுற்றிச் சுற்றி கடன் வாங்குகிறார்கள். கடையில் நகையை வாங்கி ஸாரி ஃபார் டிலே சொல்லிக் கொடுக்கிறாள் தோழியிடம். சலிப்புடன் அதை வாங்கி கொள்கிறாள் தோழி.
கடனைத் திருப்பிக் கொடுக்க வேண்டுமே? அன்றிலிருந்து நல்ல உழைக்கிறாள். வேலைக்காரியை நிறுத்திவிட்டு வீட்டில் உள்ள எல்லா வேலையையும் செய்கிறாள். அவன் இன்னொரு பார்ட் டைம் வேலையையும் செய்ய, சிறுகச் சிறுக சேமிக்கிறார்கள். பத்து வருட உழைப்பு. எல்லா கடனையும் அடைத்து நிம்மதி பெருமூச்சு! நினைக்கிறாள். ‘சின்ன ஒரு விஷயம் வாழ்க்கையை எப்படிப் புரட்டிப் போட்டு விடுகிறது!’
ஒருநாள் வழியில் தோழியை காணுகிறாள். இப்போது அவளிடம் நடந்ததை சொல்வதில் எந்த தயக்கமும் இல்லை இவளுக்கு. சொல்கிறாள். அவள் கேட்கிறாள்: “உண்மையான வைர நெக்லஸா வாங்கி கொடுத்தே எனக்கு? அது வெறும் கவரிங் தானே?”
மாப்பசானின் பிரபல கதை இது..
Guy de Mauppasant ... இன்று பிறந்த நாள்! (1850 -1893)
ஆறு நாவல்கள் எழுதி இருந்தாலும் அறியப்படுவது சிறுகதைக்காகவே... சிறுகதையின் தந்தை என்று! இவரால் கவரப்பட்டவர்களில் ஒருவர் ஓ ஹென்றி. இன்னொருவர் சாமர்செட் மாம்.
Quotes? ‘கல்யாணத்தைப் பண்ணி மகிழ்ச்சி இல்லாமல் இருப்பதைவிட காதலித்து மகிழ்ச்சி இல்லாமல் இருப்பது நல்லது; ஆனால் சிலருக்கு ரெண்டுமே வாய்த்து விடுகிறது!’
‘வாழ்க்கையில் ஒரே ஒரு நல்ல விஷயம் தான் உண்டு அதுதான் அன்பு!... காற்றை சுவாசிப்பது போல அன்பை சுவாசிப்போம்; எண்ணங்களை ஏந்துவதுபோல எப்போதும் அதை ஏந்துவோம். அதைவிட வேறொன்றும் இல்லை நமக்காக இங்கே.’

நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ்...


இங்கிருந்து அங்கே ஒரு ஜம்ப்.. அங்கிருந்து இங்கே ஒரு ஜம்ப். இங்குமங்கும் அணிலைவிட அதிவேகமாக தாவல்கள்... அது என்னமோ ரப்பர் மாதிரி இஷ்டத்துக்கு வளைகிற உடல்.. ஆம், சந்திரபாபு என்றதுமே அந்த அந்தர்பல்டிகள் தான் நினைவுக்கு வரும்.

வைரத்தை பட்டை தீட்டுவதுபோல நகைச்சுவைக்கு ஒரு பாலிஷ் கொடுத்தவர். கதாநாயகனை விட அதிக சம்பளம் வேண்டும் என்று கேட்டு வாங்கிய ஒரே நடிகர். லட்சம் தொட்ட முதல் காமெடி நடிகரும்!
இன்று பிறந்த நாள்.

ஆரம்பித்து வைத்த முன்மாதிரிகள் அனேகம். அதில் ஒன்று காமெடி நடிகர் கதாநாயகனாக நடிப்பது. கண்ணதாசனின் 'கவலை இல்லாத மனிதன்.' மற்றொன்று காமெடி நடிகர் சோகக் காட்சிகளிலும் சோபிக்க முடியும் என்று காட்டியது. ‘குமார ராஜா’ ஒன்று போதுமே?

“கல்யாணம் என்பது எது வரை?”என்று கதாநாயகன் பாடினால் “கழுத்தினில் தாலி விழும்வரை!” என்று அழகாகப் பதில் பாட இவர்தான் வேண்டும்! ('பாத காணிக்கை')

பாபு - நாகேஷ் ஜோடி சேரும்போதெல்லாம் அமர்க்களம்தான்.‘கடவுளைக் கண்டேன்’ முதல் ‘அன்னை’ வரை.

பத்மினி படத்தை வைத்துக்கொண்டு “உனக்காக, எல்லாம் உனக்காக..” பாடினாலும், சாவித்திரி படத்தை வைத்துக்கொண்டு “கோவா மாம்பழமே..” பாடினாலும் மாலினி படத்தை வைத்துக்கொண்டு “பம்பரக் கண்ணாலே…” பாடினாலும் அலுக்கவே அலுக்காது அந்த ஸ்டைல்!
“காவேரி ஓரம், கவி சொன்ன காதல்…” பாடலில் பாபுவின் பால் ரூம் டான்ஸ் திறமையை பார்க்கலாம் என்றால் ‘பதி பக்தி’ பாடலில் ராக் ஸ்டைலை ரசிக்கலாம்.

ஆம், எந்த மாதிரியும் ஆட வல்லவர். ‘சபாஷ் மீனா’ வில் சரோஜாதேவியுடன் “ஏறுங்கம்மா.. ரிக்‌ஷா ஏறுங்கம்மா…” விலிருந்து ‘நீதி'யில் “முத்தமிழின் செல்வன் வாழ்க..” என்று சிவாஜி, ஜெயலலிதாவுடன் ஆடுவது வரை சலிக்காத நடனம் அவருடையது.

பொம்மலாட்ட பொம்மை போல் பாட வேண்டுமா? “நான் கோலாலம்பூர் காட்டுக்குள்ளே குருவி பிடிக்கப் போனேன்..” (காத்தவராயன்)
கையையும் காலையும் மடித்து இடுப்பை ஒயிலாக ஒடித்து அவர் ஆடும் அந்த சந்திரபாபு ஸ்டைல் தனி முத்திரை பெற்றது.

அந்தப் படம் மட்டும் நன்கு ஓடியிருந்தால் ஜோரான டைரக்டராகவும் ஜொலித்திருப்பார். ஆம், அவர் தயாரித்து இயக்கிய ‘தட்டுங்கள் திறக்கப்படும்’. கே.ஆர்.விஜயா, சாவித்திரி, மனோகர் நடித்த க்ரைம் த்ரில்லர் அது. ஆங்கிலப் படங்களுக்கு இணையாக எடுத்திருப்பார். ஷாட்டுக்களை அந்தக் காலகட்டத்துக்கு ரொம்பவே அட்வான்ஸாக அமைத்திருப்பார். சாவித்திரியும் மனோகரும் விவாதிக்கும் காட்சியில் அந்த பிரம்மாண்ட செட்டின் ஒரு மூலையில் தொடங்கி, சுற்றி நடந்து அதே இடம் வரும் டிராலி ஷாட்டும் சரி, ஆடும் நாற்காலியில் குழந்தையைத் தாலாட்டும் சாவித்திரியை கணப்புக்குள் இருந்து காமிரா எட்டிப் பார்ப்பதும் சரி, சட்டென்று நிமிர்ந்து ரசிப்போம்.
அப்புறம் அந்த அட்டகாச ஷாட்: மாடியிலிருந்து மனோகரின் உடலை ஸ்ட்ரெச்சரில் எடுத்துக் கொண்டு நம்மை நோக்கி வருவார்கள். அப்படியே அந்த ஸ்ட்ரெச்சர் நம் தலைக்கு மேலாக படியிறங்கும்போது அசந்து போவோம். (காமிரா: பி.எஸ்.லோகநாதன்) படமே ஓர் உயர் தரத்தில் இருக்கும். பாபு பாடும் அந்தப் பிரபல "கண்மணி பாப்பா... மனிதன் பிறந்தது குரங்குக்குத்தான் என்று சொன்னது தப்பா..."(எம்.எஸ்.வி.)

ஆரம்பத்தில் அவர் பாடியது அவருக்கே அல்ல. ஏ.வி.எம்மின் ‘பெண்’ படத்தில் எஸ். பாலச்சந்தருக்கு. "கல்யாணம்... உல்லாசமாகவே.. உலகத்தில் வாழவே.."

ஏன், சிவாஜிக்கே பின்னணி பாடியிருக்கிறார். “ஜாலி லைஃப்.. தம்பதி யானால் ஜாலி லைஃப்.” (கல்யாணம் பண்ணியும் பிரம்மச்சாரி) பாடலில். “பெண்டாட்டி கூடவே கொண்டாட்டம் போடுவே.. பின்னாலே நீயும் ஓடுவே.. என்ன சொன்னாலும் பின் பாட்டு பாடுவே.. என்னை கண்டாலும் காணாத மாதிரி.. எதோ காணாததை கண்ட மாதிரி…” என்ற வரிகளை அவர் பாடும் விதமே அலாதி!

சந்திரபாபுவுக்கே மற்றவர்கள் பாடியதும் உண்டு. யார் யார்? ‘அன்னை’யில் டிஎம்எஸ். ( “லைலா மஜ்னு..”) ‘பறக்கும் பாவை’யில் ஜேசுதாஸ் (“சுகம் எதிலே இதயத்திலா..”) ஏன், சீர்காழி கூட… ("அலங்கார வல்லியே.." - 'சபாஷ் மீனா')

நிறைய காமெடி நடிகர்களைப் போலவே சொந்த வாழ்க்கை சற்றே சோகம் சிந்துவது. 46 வயதில் மறைவு என்பது நம்மைத் திகைக்க வைத்த ஒன்று.

“குங்குமப்பூவே..”வை துள்ளலாக பாடிய அதே குரல் தான், “ஒண்ணுமே புரியலே உலகத்திலே..”வை உருக்கமாகவும் 'புத்தியுள்ள மனிதரெல்லாம் வெற்றி காண்பதில்லை..”யை அட்டகாசமாகவும் பாடுவது! அங்கே கிஷோர்குமார் என்றால் இங்கே இவர் பிரபலம் yodelling-இல்.

இவரது காமெடி டிராக்குக்காகவே கூடுதலாக ஓடிய படங்களும் உண்டு. உதா: ‘சகோதரி.’ விளம்பரத்தில் அந்த “நான் ஒரு முட்டாளுங்க..” தனி இடம் பெற்றது.

அவர் நாயகனாக நடிப்பதற்காக அவரே எழுதிய கதையாம் அது. அவர் நடிக்க முடியாமல் போய்விட்டது. ஆனால் பீம்சிங் திரைக்கதையில் படம் வந்து வெற்றியும் பெற்றது: ‘பாவமன்னிப்பு'

சொல்ல வேணுமா? ‘சபாஷ் மீனா’வின் அந்த ஃபேமஸ் காட்சி! சிவாஜியின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், சந்திரபாபு டைப்பிஸ்ட் ஆகவும்; பாபுவின் அப்பா வரும்போது அவர் மேனேஜர், இவர் டைப்பிஸ்ட் ஆகவும் சட்டென்று மாறும், தூள் கிளப்பிய சாகா வரம் பெற்ற காட்சி..

அதே படத்தில் சிவாஜியுடன் ஒரு காட்சி. பயந்த குரலில் தொடங்கி படிப்படியாக இறங்கி அழுகைக் குரலுக்கு அட்டகாசமாக மாறுவார். பாபு: “முதல்ல யார் வர்றாங்க தெரியுமா கண் முன்னால? அப்பா வர்றார். அப்புறம் அந்த கலெக்டர் அப்பாத்துரை வர்றார். (குரலில் பயம்.) அப்புறம் ஜெயில் வருதுடா.. அப்புறம் விலங்கு வருது... (குரலில் நடுக்கம்) அப்புறம் தூக்குக் கயிறு…” (குரலின் அழுகை)

டவுன் சந்திரபாபு கிராமத்தில் மாட்டிக்கொண்டு முழிக்கும்போது எரியும் கற்பூரத்தை முழுங்கும்போதும், கிராமத்து சந்திரபாபு டவுனில் இட்லியை பிளேட் பிளேட்டாக விழுங்கும்போதும் அந்த காமெடியிலும் வித்தியாசத்தை துல்லியமாக காட்டியிருப்பார்.

கைலியை தூக்கி முழங்காலில் செருகிக்கொண்டு இந்த காலிலிருந்து அந்த காலுக்கும் உடம்பை மாற்றி மாற்றி பேசிக் கலாய்ப்பது அவருக்கே உரித்தானது. மெட்ராஸ் பாஷையை அவர் போல யாரால் அத்தனை தத்ரூபமான பேசமுடியும்?

‘ராஜா’ படத்தில்... மீசையால் அவதிப்பட்ட சந்திரபாபு சலூனில் சென்று ‘மீசையை எடுத்துருப்பா!’ என்கிறார். அவன்: ‘சார், உங்க முகத்திலேயே அழகா இருப்பது மீசை ஒண்ணுதான்!’ இவர்: ‘அப்படின்னா மீசையை வெச்சிட்டு முகத்தை எடுக்க சொல்றியா?’

எப்ப எங்கே கேட்டாலும் மனது (சுற்றி யாருமில்லாவிடில் உடம்பும்) துள்ளும் பாடல்கள்! பத்மினி பிரியதர்சினியுடன் 'பாதகாணிக்கை’யில் வண்டலூர் ஜூவில் ஆடும் “தனியா தவிக்கிற வயசு.. இந்த தவிப்பும் எனக்கு புதுசு..”
ஜமுனா ராணியுடன் பாடும் “நீயாடினால் ஊராடிடும்.. நானாடினால் யார் ஆடுவார்..”. (பாண்டித்தேவன்)
“தடுக்காதே என்னை தடுக்காதே..”(நாடோடி மன்னன்)
“கொஞ்சம் தள்ளிக்கணும்..” (கடவுளைக் கண்டேன்)
“சிரிப்பு வருது சிரிப்பு வருது..” (ஆண்டவன் கட்டளை)
“உன் திருமுகத்தை ஒரு முகமா திருப்பு..” (மகாதேவி)
“எப்போ வச்சுக்கலாம்.. எப்படி வெச்சுக்கலாம்..” (பந்த பாசம்)
“நம்பள்கி பியாரி நம்பள் மஜா..” (பாதுகாப்பு)
ஒவ்வொரு தம்பதியையும் சிலிர்க்க வைத்த அந்தப் பாடல் சிகரம்! “பொறந்தாலும் ஆம்பளையா பொறக்கக் கூடாது… ஐயா, பொறந்துவிட்டா..”