Monday, October 14, 2024

போகுமிடம் வெகுதூரமில்லை... (விமரிசனம்)

எப்பவாவது ஒரு தடவை தான் இந்த மாதிரி ஒரு படம் பார்க்கிற வாய்ப்பு வரும். கவிதை மாதிரி ஒரு கதையுடன்…

சரியான ‘one line’! அதற்கு அழுத்தமாகக் கொடுத்திருக்கும் bold underlines! ((((((((((((1)))))))))))))

ஏழெட்டு நிமிடத்திற்குள் கதையின் முதல்முடிச்சு தொடங்கி விடுகிறது.. அப்புறம் திருப்பங்கள் இல்லை, வரிசையாக மேலும் மேலும் முடிச்சுகள்.. எல்லாம் முடிச்சுகளையும் கடைசியில் ஒரே ஒரு திருப்பம் அவிழ்த்து விடுகிறது. என்னதான் முடிவு என்று யோசிக்கும் பொழுது ஓ, என்ன ஒரு முடிவு!

Half way opening காட்சிகளை ஆங்காங்கே கொடுத்து விறுவிறுப்பை ஏற்றி இருக்கிறார் டைரக்டர் (மைக்கேல் கே ராஜா) இண்டர்வல் ப்ளாக் ஏஒன் என்றால் ‘பாடியை யாரோ எடுத்துப் போயிட்டதை உபயோகிச்சு உங்ககிட்டே கேம் ஆடிட்டாங்கய்யா எங்க ஆளுங்க..’ என்று விமலிடம் சொல்லும் அந்த இடம் ஏ2.

பஞ்ச் டயலாக் ஏதுமில்லை. எல்லாமே படு இயல்பு. மோதுகிற இரு தரப்பினரின் பாஸ்களும் பட்டு பட்டென்று முழங்காமல் யோசித்துப் பேசுவது யதார்த்தம்..

விமல் நிலைமை தெரிந்து உதவி விட்டு, இதற்கு மேல் உன் பாடு என்று போனை வைக்கும் அந்த சண்முகம் அண்ணாச்சி… மகள் திருமணத்திற்கு பிரசினை இல்லாமல் துக்க வீட்டு சடங்குகளை சீக்கிரம் முடிக்க அதட்டும் அதே சமயம் அதிக பிரசங்கித்தனமாக பேசினவனை கண்டிக்கும் ஜமீன் வீட்டுக்காரர்… கிட்டத்தட்ட எல்லா கேரக்டர்களுமே முழுமையாக கொடுக்கப்பட்டு அதற்கான attitude காட்டி நடந்து கொள்கிறார்கள்.

கருணாஸ் தவிர வேறு யாரும் அந்த ரோலில் இத்தனை கச்சிதமாக பொருந்தி இருக்க முடியுமா? 'நந்தா'வில் எப்படி பச்சக் என்று அந்தப் பாத்திரத்தில் ஒட்டிக்கொண்டாரோ அதேபோல இப்பொழுது இந்த பாத்திரம் பச்சக்கென்று அவர் மீது ஒட்டிக்கொள்கிறது.

கடுமையான பொல்யூஷனுக்கு இடையில் கொஞ்சம் நல்ல காற்றை சுவாசித்து வந்த மாதிரி இருக்கிறது இந்த படம் பார்த்த அனுபவம்.

அகதா கிறிஸ்டி தன் நாவலில் ஆங்காங்கே அழகாக ஹின்ட் தெளித்திருப்பார், ஆனால் நம்மால் குற்றவாளியை ஊகிக்க முடியாது. கடைசியில் இவர்தான் என்று காட்டும் பொழுது அந்த ஹின்ட்ஸ் ஞாபகம் வரும் பளிச்சென்று. அதேபோல் இதிலும் அழகாகத் தெளித்திருக்கிறார்கள்.

இசையமைப்பாளர் அனாவசிய ஆரவாரத்தை பின்னணியில் செருகவில்லை. முக்கியமான இடங்களில் மனம் தொடும் melancholy notes கொடுக்கவும் தவறவில்லை. உதாரணமாக, ‘300 ரூபாயை வெச்சுக்கிட்டு எந்த வால்வோல (volvo) போவ? அதான் இதுல போயிட்டிருக்கேன்’னு கருணாஸ் சொல்லும்போது…

எண்ணிச் சிலவே குறைகள். 1. முன்பு ப்ரொஜக் ஷன் போட்டு டிரைவிங் சீன் எடுக்கும்போது காரை கொஞ்சம் ஆட்டி, ஓடும் நிழலை பானெட்டில் படர்த்தி என்று நிஜத்துக்கு மெனக்கெடுவார்கள். இப்போ ப்ளூ மாஸ்க் எல்லாம் வந்த பிறகு ப்ரொஜக் ஷன் பல்லை இளிக்காது. ஆனால் சாதாரண வேனுக்கு சுத்தமாக ஷேக் இல்லாதது அநியாயத்துக்கு உறுத்துகிறது. அத்தனை அவசரமான விஷயத்துக்கு வேகத்தை கொஞ்சம் கூட அதிகரிக்காமல் இருப்பது என்னதான் கடைசியில் அது தேவையாக இருந்தாலும் கதையின் அவசரத்துடன் ஒட்டவில்லை.

2. எத்தனை அழகான நாலு வழி ரோடு! படத்தின் பெரும் பகுதியும் அதிலே தான்.. ஆனால் முன் பக்க ஷாட் மட்டுமே அதிகமாக வைத்திருப்பது... side views எத்தனை வைக்கலாம்! அதன் absence தெரிகிறது. 3. பேப்பரில் கதையின் நியூஸை வெள்ளை பேப்பரில் ஒட்டி காட்டுவது! இன்றைக்கும் அப்படியேதான் இருக்கிறது!

4. தன்னுடைய கூத்துக் கலை தனக்கு சோறு போட முடியாத நிலையைச் சொல்லி வருந்தும்போது பொங்கும் நம் அனுதாபம் அவர் தண்ணி அடிக்கும் போது குறைந்து விடுகிறதில்லையா?

வேகமாக தொடங்கி பிற்பாதியில் தடுமாறி மெதுவாக முடியும் பல படங்களுக்கு இடையில் இது நேர் மாறாக! படிப்படியாக விறுவிறுப்பை கடைசிவரை அதிகரிக்கச் செய்வதே சிறந்த திரைக்கதை. அமைப்பதுதான் கடினம். அதை மிக மிக புத்திசாலித்தனமாக செய்திருக்கிறார்கள்.
நல்ல படமே வருவதில்லை என்று யாராவது அலுத்துக் கொண்டால் அவர்கள் இந்த படத்தை பார்க்கவில்லை என்று அர்த்தம்.

போகுமிடம் வெகு தூரம் இல்லை என்று தெரிகிறது: தரம் நோக்கி பட உலகம்!
><><><

Monday, September 30, 2024

அவள் போட்ட கணக்கு…


அவள் போட்ட கணக்கு…

கே. பி. ஜனார்த்தனன்
பரக்கப் பரக்கத் தன் இருக்கையில் வந்து அமர்ந்தாள் ராஜி. டாக்டர் ரவிசங்கரின் அந்த இ.என்.டி. கிளினிக்கில் வேலை அவளுக்கு. வருகிற பேஷண்டுக்கு சீட்டு எழுதி டோக்கன் கொடுக்கணும்.
கொஞ்ச நேரம் தாமதம் ஆனாலும் டாக்டர் கோபித்துக் கொள்வார். பங்சுவாலிட்டி ரொம்ப முக்கியம் அவருக்கு.
தவிப்பாக இருந்தது மனதில். வீட்டில் தம்பி ரவி தனியே இருப்பான். “அக்கா, அக்கா இந்த நாலு கணக்கை போட்டு முடிக்கிற வரையாவது கூட இரேன்,” என்று கெஞ்சினான். டாக்டரின் கோபப் பார்வை கண்ணில் வந்து நிற்க உதறிவிட்டு ஓடிவந்தாள்.
கணக்கு என்றாலே அவனுக்கு சிம்ம சொப்பனம். ஆனால் புத்திசாலி. பக்கத்தில் இருந்து கொஞ்சம் தட்டிக் கொடுத்து உற்சாகப் படுத்தினால் போதும், மளமளவென்று போட்டு விடுவான் எல்லா கணக்கையும். கணக்குதான் என்றில்லை, ஆங்கிலம், தமிழ், விஞ்ஞானம் எதுவானாலும் சற்றே அவள் ஊக்குவித்தால் சாதித்து விடுவான். தாய் இல்லாத பையனுக்கு அக்காதான் எல்லாம். குடிகார அப்பாவை தலைவராக கொண்ட ஏழைக் குடும்பத்தின் பிரதிநிதியாக வேலைக்கு வந்தவள் ஆயிற்றே அவள்?
ஆனால் இரவு 9 மணி வரை கிளினிக்கில் இருக்க வேண்டும் அவள். அது மட்டுமா? இங்கே இன்னொரு பிரசினை இருந்தது.
“ஹாய் ராஜி!” என்ற குரல் நாராசமாய் ஒலித்தது காதில். வந்துவிட்டது அந்த பிரசினை.
ஒரு ஸ்டூலைத் தூக்கி அவள் எதிரில் போட்டு அமர்ந்து கொண்டான் மதன். டாக்டரின் மைத்துனன் அவன். “என்ன இன்னிக்கு ரஷ் ஏதும் இல்லை, ஃப்ரீயா தான் இருக்கே போல?”
ராஜி வாசலை எட்டிப் பார்த்தாள். ஏதாவது பேஷண்ட் வந்தாலாவது இவன்கிட்டேயிருந்து தப்பிக்கலாம்.
“ஒரு ஜோக் சொல்லட்டுமா? கேட்டவுடனே சிரிப்பு வந்திரும்…” என்று தொடங்கினான்.
இவன் தான் அந்த இன்னொரு பிரசினை. டாக்டரின் மைத்துனன் என்ற உரிமையில் தினமும் அங்கே ஆஜராகி விடுவான். பி.பி.எம். முடித்துவிட்டு வேலை கிடைக்காமல் சுற்றிக் கொண்டிருப்பவன். பெரும்பாலும் பெண்கள் பின்னால்.
வந்து உட்கார்ந்தான் என்றால் அவளை அசத்துவதற்காக அதையும் இதையும் பேசி... அதுவும் கூட்டம் இல்லை என்றால் அந்த தனிமையை உபயோகித்து ரொம்ப தாராளமாக பேச ஆரம்பித்து விடுவான். டாக்டர் மனைவியின் செல்லத் தம்பியாச்சே, இவனைப் பற்றிப் புகார் செய்தால் இருக்கிற வேலையும் போய்விடுமே என்கிற கவலை அவளுக்கு.
அந்த நேரம் இரண்டு நோயாளிகள் வந்து விட, அவனிடமிருந்து தற்காலிகமாக விடுதலை கிடைத்தது. அப்போதுதான் அந்த யோசனை மனதில்… டாக்டரின் அறையில் நுழைந்தாள். தான் கேட்க வந்ததை மெல்லக் கேட்டு விட்டாள்.
“அதற்கென்ன, ஓகே!” பச்சைக்கொடி காட்டிவிட்டார் அவர்.
^^ ^^ ^^
மறுநாள் மாலை. கிளினிக்கில்…
“ஏழாவது கணக்கை போட்டுட்டியா? சூப்பர்! இப்ப எட்டாவதைப் பார்த்து ஸ்டெப் எழுது,” என்று தம்பிக்கு சொல்லிக் கொண்டு அடுத்த டோக்கனை எடுத்து வைத்தாள் ராஜி. பக்கத்தில் ஒரு ஸ்டூலில் உட்கார்ந்து பாடத்தை எழுதிக் கொண்டிருந்தான் ரவி.
“ஹாய்!” என்று உள்ளே நுழைந்த மதன் இந்த திடீர் சூழ்நிலை மாற்றத்தால் தாக்குண்டு அதிர்ந்து நின்றான்.
தன் தம்பியையும் தன்னுடன் அழைத்து வந்து ஒரு ஓரத்தில் உட்கார்த்தி வைத்துக் கொள்ள பெர்மிஷன் கேட்டு வாங்கி ஒரே ஐடியாவில் இரண்டு பிரசினைக்கு தீர்வு கண்டுபிடித்துவிட்ட தன் சாதுரியத்தை தனக்குள் வியந்து கொண்டாள் ராஜி.

மொழி பெயர்ப்பு....



இன்று சர்வதேச மொழிபெயர்ப்பு தினம்.

நான் மொழி பெயர்த்த (முழி பிதுங்கிய) சில மேற்கோள்கள்…


’வாழ்வினூடே கடந்து செல்லாதீர்,
வளர்ந்து செல்வீர்!’
- Eric Butterworth
(‘Don’t go through life, grow through life.’)
'மட்டற்ற உழைப்புக்கு
மாற்று இல்லை.'
- Edison
('There is no substitute for hard work.')
’ஏற்றுக் கொள்ளலில் மட்டுமே
வீற்றிருக்கமுடியும்
மகிழ்ச்சி.’
- George Orwell
('Happiness can exist only in acceptance.')
'என்ன உன் திறமையோ அதை உபயோகி:
பாட நன்கறிந்த பறவைகள் மட்டுமே
பாடின எனில்
காடுகள் மிக அமைதியாக அல்லவோ
காணப்படும்?'
-Henry Van Dyke
('Use what talents you possess: the woods would be very
silent if no birds sang there except those that sang best.')
'தன்னோடிசைவாய் வாழ்கிறவன்
தரணியோடிசைவாய் வாழ்கிறான்.'
-Marcus Aurelius
('He who lives in harmony with himself
lives in harmony with the universe.')
’கண்ணாடிகளை ஜன்னல்களாக்குவதே
கல்வியின் முழு நோக்கம்.’
- Sydney J. Harris
('The whole purpose of education is to turn mirrors into windows.')
'வாழ்க்கை விரிகிறது, சுருங்குகிறது
நம் துணிவின் அளவுக்கு.'
- Anais Nin
('Life shrinks or expands in proportion to one's courage.')
'வளமான காலங்களில்,
நண்பர்கள் நம்மை அறிகிறார்கள்;
இடரான போதில்,
நாம் நண்பர்களை அறிகிறோம்.’
- John Churton Collins
(’In prosperity, our friends know us; in
adversity we know our friends.’)
'அச்சப்படுவதிலிருந்து அகன்றபின்னரே
ஆரம்பிக்கிறோம் வாழ.'
- Dorothy Thompson
('Only when we are no longer afraid do we begin to live.')
வீழான் ஒருபோதும் எனில் மனிதன்
தெய்வம் ஆகிவிடுவான்;
விழைவிலான் ஒருபோதும் எனில் அவன்
விலங்கு ஆகிவிடுவான்.’
- Mackenzie King
(’Were man never to fall, he would be a God;
were he never to aspire, he would be a brute.’)
'அதற்கான நம் தகுதி எத்தனை குறைந்ததோ
அத்தனை அதிகம் எதிர்பார்க்கிறோம்
அதிர்ஷ்டத்தை.'
- Lucius Annaeus Seneca
('The less we deserve good fortune,
the more we hope for it.')
’வெற்றியடைய என் தீர்மானம்
வேண்டுமளவு உறுதியாயிருந்தால்
தாண்டிச் செல்ல முடியாது என்னை தோல்வி'.
- Og Mandino
('Failure will never overtake me if my determination
to succeed is strong enough.')