Friday, September 26, 2014

அனுபவம் இரண்டு நாள்...




அன்புடன் ஒரு நிமிடம் - 65

மாமா வீட்டில் நுழைந்தவுடனேயே அத்தையின் புலம்பல் கிஷோரைத் தாக்கிற்று.
ஏம்பா நீயாவது இவருக்கு கொஞ்சம் சொல்லக்கூடாதா? அடுத்த வாரம் பூஜா ஹாஸ்டலிலிருந்து வர்றா. பதினஞ்சு நாள் லீவு. புவனும் கம்பெனியில் லீவு போட்டிட்டு அதே நாள் வர்றான். பிள்ளைங்க வர்ற நேரத்தில பாரு வீட்டை இன்னும் சரி பண்ணாமல் அப்படியே போட்டிருக்காரு. பாத்ரூம் குழாயில தண்ணி சரியா வரலே. இன்வெர்டர் பேட்டரியில் சார்ஜ் இறங்கி போச்சு. கார் ஸ்டார்ட் ஆகலே. அவங்க ரெண்டு பேர் அறையும் உட்காரக்க்கூட இடமில்லாமல் பழைய புஸ்தகமும் துணியுமா அடைந்து கிடக்குது...”
ராகவ்வை நோக்கி இவன் பார்வை திரும்ப...
அலட்டவே இல்லை அவர். “அதெல்லாம் பார்த்துக்கலாம்டா. இன்னும் ஒரு வாரம் இருக்கே.”
ஒரு வாரமும் அவர் ஒரு துரும்பையும் அசைக்கவில்லை என்பது அடுத்த வாரம் சென்றபோது தெரிந்தது.
வீடு அமளி துமளிப் பட்டுக்கொண்டிருந்தது. பிள்ளைகள் வந்திருந்தார்கள்.
பிளம்பர் ஒரு பக்கம் குழாயை சரி செய்ய, பூஜா காரை பழுது பார்க்க எடுத்துப் போக, புவனுடன் சேர்ந்து மாமா அறைகளை சுத்தம் பண்ணிக்கொண்டிருந்தார்.
வேகம் வேகமாக வேலை நடந்ததில் எல்லா விஷயங்களும் இரண்டு நாட்களில் சரியாகி விட்டாலும் கையிலிருந்த நாட்களைக் கோட்டை விட்டு விட்டு இவர் இப்படி நிலைமையை மோசமாக்கியிருக்க வேண்டாமே என்று தோன்றிற்று.
இப்போது சொன்னால் நன்றாயிராது.
பிள்ளைகள் கிளம்பின பிற்பாடு ஒரு நாள் அவரிடம் கடிந்து கொண்டான் கிஷோர். “...ஏன் இப்படி வீணாக சிரமத்தை அதிகரித்துக் கொள்ளணும்?”
அவரோ சிரித்தார். “சிரமத்தை அதிகரித்ததாக யார் சொன்னது? எனக்கு மட்டும் தெரியாதா என்ன?  வேண்டுமென்றேதான் பிள்ளைகள் வரும்வரை வேலைகளைத் தள்ளிக் கொண்டு போனேன்.அவங்க வரும் முன் எல்லாவற்றையும் சரி செய்து வைத்துவிட்டால் வீட்டிலுள்ள கஷ்டங்களையும் பிரசினைகளையும் பற்றி அவங்க தெரிந்துகொள்ள வாய்ப்பே இல்லாம போயிடும் இல்லையா?”
சரி அதற்காக? இப்ப அவங்களும் சேர்ந்து ரெண்டு நாள் ஓடியாடி வேலை செய்து... லீவில் ரெண்டு நாள் வேஸ்ட் ஆனதே!”
வேஸ்ட் அல்ல அது. ரெண்டே நாளில் அத்தனை பிரசினைகளையும் சரி செய்து வேலைகளை முடித்துவிடலாம் என்கிற நேரடி அனுபவ பயிற்சி அல்லவா கிடைச்சிருக்கு? இது அவங்களுக்கு எப்பவும் கை கொடுக்கும் இல்லையா?”
ஷ்யூர்!” என்றான் கிஷோர்.  
(’அமுதம்’ ஜனவரி 2014 இதழில் வெளியானது.)
><><><
(படம் - நன்றி: கூகிள்)



Saturday, September 20, 2014

கொஞ்ச நேரம்...



இதோ இந்த பார்க் பெஞ்சில்
இருந்துவிட்டுப் போகிறேன்  ஓர்
இரண்டு மணி நேரம்.
பக்கத்தில் அமருகிறவர்கள் 
பாதிக்குமேல் என் இடத்தை 
பிடுங்கிக்கொள்ளக்கூடும்.
தலையணை கொண்டுவந்து தரவும் கூடும்.
வம்பு வளர்ப்பவர்களாகவோ
அறிவு வளர்ப்பவர்களாகவோ...
வெகுண்டு வாதிடுவானேன் அவர்களுடன்?
மௌனப் போராட்டமும் தன்னையே வதைக்கும்.
சிரிப்பொன்றை சிந்திவிட்டுப் போகிறேன்.
சீற்றம் காட்டுவதால்
சிறிதும் வசப்படப் போவதில்லை சூழ் நிலை.
இன்முகமும் எனக்கொன்று உண்டென்பதை 
எப்போது யாரிடம்தான் தெரிவிப்பது?
சிரிப்பில் கரைந்துவிடும் 
சிந்தனையின் சகல சிக்கல்களும் என்பதை
வேறெப்போதுதான் கண்டு கொள்வது?
><><><




Wednesday, September 17, 2014

அவள் - 8.


44

பஸ்சிலும் ரயிலிலும்
படகிலும் விமானத்திலும்
பயணிக்கிறது உன்கூடவே
என் மனது.

45
ஆகச் சிறந்த நாள்
என்றெனக்கு ஒன்றுண்டு.
உன்னை முதலில்
கண்ட நாள்.

46
பொருளும் சுவையும்
பொருந்தி நிற்கிற
கவிதை நீ.

47
சுவரின் அந்தப்பக்கம்
நில்லேன்,
சொல்ல வந்ததை எல்லாம்
சொல்லி விடுகிறேன்

48
சந்திரனைக் கடன்
கேட்டேன்
ஆகாயத்திடம்,
உன் சிரிப்புக்கு
விலையாய்த் தர.

49
கம்பீரம்-
நீ உடுத்தியதால்
உன் புடவைக்கு
ஏற்படுவது.

50
பத்தாயிரம் வார்த்தைகளை
அடுக்குவது சிரமம்தான்.
இருந்தாலும் ஆரம்பித்து விட்டேன்
உன்
அழகை வர்ணிக்க.
><><>< 

(படம் – நன்றி: கூகிள்)

Sunday, September 14, 2014

நல்லதா நாலு வார்த்தை... 36


நம்மைவிட 
குறைந்த புத்திகூர்மையும் 
கூடுதல் விவேகமும் 
கொண்டவரைப் போல 
எரிச்சலூட்டுபவர் இலர்.’
- Don Herold
('There is nobody so irritating as somebody 
with less intelligence and more sense than we have.')
<>

எதையும் நம்பாதவனுக்குக்கூட
தன்னை நம்ப ஓர் யுவதி
தேவைப்படுகிறாள்.’
- Eugen Rosenstock-Huessy
(‘He who believes in nothing still needs 
a girl to believe in him.’)
<>

'கலையில் மனிதன் 
வெளிப்படுத்துவது 
தன்னையே, 
பொருள்களை அல்ல.'
- Rabindranath Tagore
(‘In art, man reveals himself and 
not his objects.’)
<>

ஒவ்வொரு மனிதரின் 
ஆகச் சிறந்ததில்
நம்பிக்கை கொள்ள
நான் விரும்புகிறேன்,
அது எனக்கு அனேக 
அல்லல்களைத் தவிர்க்கும்.’
- Rudyard Kipling
(‘I always prefer to believe the best of 
everybody, it saves so much trouble.’).
<>

அளந்து பார்த்தால் வாழ்க்கை
ஆகச் சில கணங்களே.
அதில் ஒன்று இது.’
- Charlie Sheen
{‘Life all comes down to a few moments. 
This is one of them.’)
<>

'எங்கே போகிறோம் 
என்பதுனக்குத் தெரியாவிடில் 
எந்தப் பாதையும் 
கொண்டு சேர்க்கும் அங்கே!'
- Lewis Carroll
(‘If you don’t know where you are going, 
any road will get you there.’)

<><><>
(படம் - நன்றி : கூகிள்)

Tuesday, September 9, 2014

அணுகு முறை...



ண்பர் சேது வீட்டில் நான் நுழைந்த போது அவர் தன் பையனை வார்த்தைகளால் துவைத்துக் கொண்டிருந்தார். போன வருஷம் வாங்கிய ஐந்தாம் ராங்கை விட்டு இப்ப எட்டுக்கு வந்துட்டானாம்.
''வாத்தியார் என்ன சொன்னார்? பையன் ரொம்ப ஸ்லோன்னு சொன்னாரா?'' என்று கேட்டேன்.
''இல்லை.''
''அப்ப ஐன்ஸ்டீன் மாதிரி எல்லாம் வரமாட்டான்.''
''பையன் கணக்குல புலி.''
''அப்ப ஒரு பெஞ்சமின் ஃபிராங்லின் ஆகவும் முடியாது. ஏன்னா அவர் கணக்குல வெரி புவர்! ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ் நிறைய வருதா?''
''வரவே வராது.''
''சே, பெர்னார்ட்ஷா ஆகிறதுக்கும் சான்ஸ் இல்லே! கிளாசில் அடி மட்டத்துக்குப் போயிருந்தானா?''
''நெவர்.''
''போச்சு. எடிசன் ஆகிற வாய்ப்பும் இல்லே. சரி, அடிக்கடி ரொம்ப டல்லா இருப்பானா?''
''அப்படி நான் பார்த்ததே இல்லே.''
''அப்ப ஜேம்ஸ் வாட் மாதிரியும் வரமாட்டான் போல... ஒகே. உங்க கவலை நியாயமானது தான். இத்தனை பிரபல மனிதர்களின் ஒரு மைனஸ் பாயிண்டும் இல்லையே இவனிடம்?''
கையைப் பிடித்துக் கொண்டார் நண்பர். ''என் கண்ணைத் திறந்தீங்க... டேய் பிரனேஷ், இங்கே வாடா,'' என்றார் மிக மிக அன்பான குரலில், ''சாரிடா!''

(குமுதம் 14-02-2007 இதழில் வெளியானது)
><><><><
(படம் - நன்றி: கூகிள்)

Friday, September 5, 2014

முதலில் ஒன்று...


அன்புடன் ஒரு நிமிடம் - 64.

"இதை என்னால் டைஜெஸ்ட் பண்ண முடியலே..." என்றான் குமரன் மனக் குமுறலுடன். 

"ஏன் நல்லா வேக வைத்திருக்கிறாங்கதானே பூரியை?"
என்றார் சாத்வீகன்.

"இதை இல்லைங்க, என்னைச் சுத்தி நடக்கிறதை சொல்றேன்." என்றான் அவன், சாத்வீகனின் நண்பர் மகன். இருவரும் இருந்தது ஓர் உணவகத்தில்.

"என்னோட வேலை பார்க்கிற ரமேஷை எடுத்துக்குங்க.ஒவ்வொரு  பிரமோஷனும் சரியான நேரத்தில அவன் மடியில் வந்து விழுது. கிடுகிடுன்னு மேலேறி இப்ப எனக்கே மானேஜராயிட்டான். எனக்கானால் ஓரோர் பிரசினை வந்து இன்னும் அப்படியே இருக்கேன். என் கிளாஸ் மேட்  கோபாலன் பாருங்க, சாதாரண வேலைதான் அவனுக்கு. ஆனா பசங்க நல்லா படிச்சு எஞ்சினீயர் டாக்டர்னு ஆகி இப்ப அவன் சௌக்கியமா யு எஸ்ல செட்டிலாயிட்டான். எனக்கு பாருங்க, ரெண்டு பசங்களும் டிகிரி முடிக்கவே தடுமாறி...  பொண்ணு கல்யாணம் சரியா இன்னும் அமையாமல் அதில திணறிட்டிருக்கேன். ஏன,்  பக்கத்து வீட்டு பரமசிவம்? சின்னதா ஸ்பேர் பார்ட்ஸ் கடை , அதும் என்கிட்டே கொஞ்சம் கடனும் வாங்கி ஆரம்பிச்சான். இன்னிக்கு மில்லியனேர். மூணு பொண்ணுங்களையும் பெரிய இடத்தில கட்டிக் கொடுத்து... நான் என்னடான்னா... என்ன எழுந்திட்டீங்க?"

"சாப்பிட்டுட்டோமில்லே? அப்ப பில்லை கொடுக்க வேணாமா? அதான! ் எழுந்திரு. காபி இங்கே வேணாம.் பக்கத்து காண்டீன்ல பிரமாதமா இருக்கும்."

பில்லைக் கொடுத்தார்கள்.

கான்டீனுக்குள் அவர்கள் நுழைய குமரன் நின்று பர்சை எடுத்தார். "இங்கே முதல்ல டோக்கன் எடுக்கணும் இல்லையா?" எடுத்தார். 

காபியை அருந்திய படியே தொடர்ந்தார் குமரன்.  "இவங்க மூணு பேருக்கும் எல்லா விஷயங்களுமே லாபமாகவும் சாதகமாவும் நடந்துட்டு வருது. எனக்கோ... பாருங்கf  நான் வாழற வாழ்க்கையை! இதுவரைக்கும் ஒரு விஷயமாவது உருப்படியா நடக்கணுமே? பசங்களுக்கு வேலை கிடைக்கலே. பொண்ணுக்கு கல்யாணம் செட் ஆகலே. பக்க வாதத்தில் விழுந்த மனைவிக்கு நாலு வருஷமா உடல் தேறலே.  எனக்கு என்ன பதில் கிடைக்கப்போகுது ஆண்டவனிடமிருந்து? உங்களால் சொல்ல முடியுமா?"

சாத்வீகன் அவரையே கூர்ந்து பார்த்தார். பிறகு நிதானமாகச் சொன்னார்.

"இத பாரு, உன் கேள்விக்கு இதிலே பதில் இருக்கான்னு எனக்குத் தெரியாது. ஆனா இதை மட்டும் சொல்றேன். அங்கெ சாப்பிட்டுவிட்டு அப்புறம் பில் கொடுத்தோம். இங்கே பில்லை முதலில் கொடுத்துவிட்டு அப்புறம் சாப்பிடறோம். வித்தியாசம் புரியுதா உனக்கு?"
ஒரு கணம் யோசித்தார். 

"புரியுது!" என்றார் உற்சாகமாக. 

(’அமுதம்’ ஜனவரி 2014 இதழில் வெளியானது.)

><><><

(படம்- நன்றி : கூகிள்)

Wednesday, September 3, 2014

அவள் - 7


37
ன்றேனும் ஓர் நாள்
நீ
என் முகம் பார்க்கக்கூடும்
ஏராளம் கவிதைகளை
விலக்கிகொண்டு!
<>
38
சேர்த்துக் கொள்வதற்கில்லை
உன் மீது
கவிதை பாடாத நாட்களை
என் வாழ் நாளுடன்.
<>
39
ன் அனுமதியின்றி
வெகு நேரமாக
உன்னுடன்
பேசிக்கொண்டிருக்கிறேன்
என் கனவில்.
<>
40
ட்டிப் பார்த்தேன் வெளியே
நீ நடந்து போய்க் கொண்டிருந்தாய்
உன் பின்னே நானும்.
போவதைப் பார்த்தேன்.
<>
41
ங்கேயும் நான்
வழி தவறிச் சென்றுவிடாதபடி
கூடவே
உன் நினைவுகள்.
<>
42
றுப்பு வெள்ளையாக
இருந்த என்
கனவுகள்
கலரில் தெரிய ஆரம்பித்தது
உன்னை சந்தித்ததிலிருந்து.
<>
43
ருபத்தி நாலு மணி நேரத்தில்
இருபத்து மூன்று மணி
உன்னைப் பற்றியே
எண்ணுகிறேன்…
ஒரு மணி நேரம்
உன் மீது கவிதை
எழுதுகிறேன்.
><><><><
(படம்- நன்றி:கூகிள்)